புதுச்சேரி: வினாத்தாள் குளறுபடியால் எம்பிபிஎஸ் தேர்வு ரத்து
புதுச்சேரி: புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு தேர்வில் வினாத்தாள் மாற்றி கொடுக்கப்பட்டதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஏழு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் நிகர்நிலை பல்கலைக்கழகம் தவிர்த்த மூன்று தனியார் கல்லூரிகளுக்கு புதுச்சேரி பல்கலைக்கழகம் தேர்வு நடத்தி தேர்வு முடிவுகளை வெளியிட்டு வருகிறது.
இந்த மூன்று மருத்துவக் கல்லூரிகளில் பயின்று வரும் எம்.பி.பி. எஸ் இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் வேல்ராம்பட்டு சாரதா கங்காதரன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
இறுதியாண்டு மாணவர்களுக்கு மெடிசன், சர்ஜரி, மகப்பேறு மருத்துவம், குழந்தை மருத்துவம் உள்ளிட்ட ஏழு பாடத்தேர்வுகள் உள்ளன. மெடிசன், சர்ஜரி ஆகிய பாடங்களுக்கான முதல் தாள், இரண்டாம் தாள் உள்ளிட்ட நான்கு தேர்வுகள் முடிந்தன.
ஐந்தாவது நாளாக மகப்பேறு மருத்துவம் முதல் தாள் தேர்வு நேற்று காலை தொடங்கியது. மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகள் சரிபார்க்கப்பட்டு தேர்வு அறையில் அனுமதிக்கப்பட்டனர்.
காலை 10 மணிக்கு அனைவருக்கும் கேள்வித் தாள் வினியோகம் செய்யப்பட்டது. கேள்வித்தாளை வாங்கிய மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வினாக்கள் இரண்டாம் தாளில் இருந்து கேட்கப்பட்டிருந்தது.
ஆனால் கேள்வித்தாளில் முதல் தாள் என்றும், பாடத்திற்கான ரகசிய குறியீட்டு எண்ணும் சரியாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து மாணவர்கள் தேர்வு கண்காணிப்பாளர்களிடம் முறையிட்டனர். உடனே பல்கலைக்கழகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் குழப்பத்தைத் தொடர்ந்து வினாத்தாள்கள் திரும்ப பெறப்பட்டு, தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறு தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.