டைகர் உட்ஸுக்கு 2 பெண்களுடன் தொடர்பு!
இந்த நிலையில், தான் பாவம் செய்திருப்பதாக டைகர் உட்ஸ் தனது இணையதளத்தில் எழுதியுள்ளார்.
ஒரு கார் விபத்தில் சிக்கினாலும் சிக்கினார், டைகர் உட்ஸின் உள் விஷயங்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகி அவரது கேரியரை பெரும் கேள்விக்குறியாக்கி வருகின்றன.
நவம்பர் 27ம் தேதி புளோரிடாவில் உள்ள தனது வீட்டிலிருந்து காரில் கிளம்பிய உட்ஸ் விபத்தில் சிக்கினார். இதில் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது.
ஆனால் இந்தக் காயம் விபத்தால் ஏற்பட்டதல்ல, மாறாக அவரது மனைவி தாக்கியதால் ஏற்பட்ட காயம் என்று பின்னர் தெரிய வந்தது.
உட்ஸுக்கும், நியூயார்க்கைச் சேர்ந்த பார் ஊழியையான ராச்சல் உசிதலுக்கும் இடையே தொடர்பு இருப்பது உட்ஸின் மனைவிக்குத் தெரிய வந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் உட்ஸுடன் சண்டை பிடித்ததாகவும், அவரைத் தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகின.
அவரிடமிருந்து தப்பவே வேகமாக வெளியேறி காரை எடுத்துக் கொண்டு ஓடியுள்ளார் உட்ஸ். அப்போதுதான் விபத்து நடந்தது.
உட்ஸை, அவரது மனைவி கோல்ப் மட்டையால் துரத்திக் கொண்டு வந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததால் விவகாரம் சூடு பிடித்தது.
இந்த நிலையில் தற்போது இன்னொரு பெண் தனக்கும், உட்ஸுக்கும் இடையே 31 மாத கால உறவு இருப்பதாக போட்டு உடைத்துள்ளார்.
அவர் லாஸ் ஏஞ்சலெஸைச் சேர்ந்த கிளப் ஒன்றில், மதுபானங்களை பரிமாறும் ஊழியை ஆவார். பெயர் ஜெய்மி கிரப்ஸ். தனக்கும், உட்ஸுக்கும் 31 மாத காலமாக தொடர்பு இருப்பதாக ஜெய்மி கூறியுள்ளார்.
அத்தோடு நில்லாமல், உட்ஸ் தனக்கு அனுப்பிய வாய்ஸ் மெயிலையும் அவர் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். அதில், தயவு செய்து உனது பெயரை உன்னுடைய போனிலிருந்து எடுத்து விடேன். எனது மனைவி என்னுடைய போனை அடிக்கடி பரிசோதிக்கிறாள். எனவே எனக்காக இதை செய், வேகமாக செய், பிறகு பேசுகிறேன், பை என்று கூறியுள்ளார் உட்ஸ்.
அடுத்தடுத்து இரு பெண்களுடன் உட்ஸுக்குத் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் உட்ஸின் நிலை பெரும் தர்மசங்கடத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த நிலையில் தனது இணையதளத்தில், நான் பாவம் செய்து விட்டேன், அதை இதயப்பூர்வமாக உணர்கிறேன் என்று உருக்கமாக கூறியுள்ளார் உட்ஸ்.
நவம்பர் 27ம் தேதி நடந்த விபத்துக்குப் பின்னர் உட்ஸ் தனது வீட்டை விட்டு வெளியே வராமல் அடைந்து கிடக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.