தமிழகத்தில் 24 புதிய தொழில் பயிற்சி மையங்கள்!
சென்னை: தமிழகத்தில் 24 புதிய தொழில் பயிற்சி மையங்கள் அமைப்பதற்கான இடங்களை தமிழக அரசு அடையாளம் கண்டிருப்பதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஹரீஷ் ராவத் மாநிலங்களவையில் எழுத்து பூர்வமாக அவர் அளித்துள்ள பதில்:
தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் ஊரகப் பகுதிகளில் 1500 புதிய தொழில் பயிற்சி மையங்கள் (ஐடிஐ) அமைக்கப்படவுள்ளது.
இதில் தமிழக அரசு 24 புதிய தொழில் பயிற்சி யைமங்களை அமைப்பதற்கான இடங்களை அடையாளம் கண்டுள்ளது.
பிரமதர் அறிவித்தபடி ஐடிஐ இல்லாத ஊரகப் பகுதிகளில் இவை அமைக்கப்படும். இந்த தொழில் பயிற்சி மையங்களில் வேளாண் மற்றும் வேளாண் அல்லாத தொழில்களில் அந்தந்தப் பகுதிகளின் தேவைக்கு ஏற்ப பயிற்சிகள் அளிக்கப்படும்.
இந்த மையங்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படவிருப்பதால் குறுகிய கால பயிற்சிகள் உட்பட தேவையான அனைத்து வகை பயிற்சிகளையும் அளிக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்படும். இந்த மையங்களை அமைக்க தனியார் முன்வராத நிலையில் மாநில அரசுகளே இவற்றை அமைக்கும்.