சென்னை: 7 தொழிலாளர்கள் டிஸ்மிஸ்- ரயில்வே அதிரடி
சென்னை: ஊக்கத் தொகை குறைப்பை கண்டித்து போராடும் போது, அலுவலகத்தை அடித்து நொறுக்கிய தொழிலாளர்கள் 7 பேரை ரயில்வே நிர்வாகம் டிஸ்மிஸ் செய்துள்ளது.
அயனாவரம் ரெயில்வே கேரேஜ் மற்றும் வேகன் பழுது பார்க்கும் பணிமனையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த தொழிலாளர்களுக்கு பதவி மற்றும் பணி நேரத்தின் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதில் 30 சதவீத ஊக்கத் தொகையை ரெயில்வே நிர்வாகம் குறைக்க முடிவு செய்தது.
இதனால் கடந்த 30ம் தேதி தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரும் திரண்டு மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது நடந்த வன்முறையில் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.
இது தொடர்பாக பெரம்பூர் ரெயில்வே போலீசில் 27 பேர் மீது புகார் செய்யப்பட்டது. அவர்களில் 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த போராட்டத்தால், ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள சொத்துக்கள் சேதமானதால், சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் மீது ரயில்வே நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்ட 7 தொழிலாளர்களை டிஸ்மிஸ் செய்து ரெயில்வே நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.