பாபர் மசூதி இடிப்பு தினம்: நாளை சபரிமலை சன்னிதானத்திற்குள் நுழைய தடை
சபரிமலை: டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதையொட்டி நாளை இரவு சபரிமலை சன்னிதானத்திற்குள் பக்தர்கள் செல்ல அனுமதிக்ப்பட மாட்டாது என்று சபரிமலை காவல்துறை கட்டுப்பாட்டி அதிகாரி அறிவித்துள்ளார்.
சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதால் சபரிமலையில் பல்வேறு வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. நாளை இரவு 11 மணிக்கு சபரிமலை கோவில் நடை அடைக்கப்பட்ட பின் யாரும் சன்னிதானத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
நாளையும், 6, 7-ந் தேதிகளிலும் இருமுடி கட்டு இல்லாமல் வருபவர்களுக்கு தரிசன அனுமதி கிடையாது.
இருமுடி கட்டுகளை கோவில் சன்னதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அவிழ்க்க அனுமதி இல்லை. சன்னிதானத்தில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. பக்தர்களின் செல்போன்களை பாதுகாக்க சன்னிதானம் நடைப்பந்தல் அருகில் சிறப்பு கவுண்டர் அமைக்கப்பட்டு உள்ளது.
பக்தர்கள் தேங்காய் உடைக்க கொண்டு வரும் கத்திகள் மற்றும் இரும்பு பொருட்களை நடைப்பந்தலில் அமைக்கப்பட்டுள்ள கவுண்டரில் வைத்து விட்டு சன்னிதானத்தில் தரிசனத்துக்கு செல்ல வேண்டும்.
மேற்கூறிய நாட்களில் பக்தர்கள் கொண்டுவரும் நெய் தேங்காய்களை உடைத்து நெய்த்தோணியில் விட அனுமதி கிடையாது. இதற்காக மாளிகைப்புரம் மேம்பாலம் அருகில் வைக்கப்பட்டு உள்ள பாத்திரத்தை பயன்படுத்த வேண்டும்.
இந்த 3 நாட்களும் கோவில் உண்டியல் மற்றும் சன்னதியில் காணிக்கை மற்றும் நேர்ச்சை பொருட்களை போடுவது தடை செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மாநில காவல்துறை அமைச்சர் கொடியேரி பாலகிருஷ்ணன் கூறுகையில்,
சபரிமலையில் மேலும் பாதுகாப்பை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளோம். சபரிமலையில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை சீசன்களுக்கு பின்னும் போலீஸ் பாதுகாப்பை தொடர்வதுபற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசிடம் மேலும் மத்திய பாதுகாப்பு படை வீரர்களை சபரிமலை பாதுகாப்பு பணிக்கு அனுப்ப கேட்கப்பட உள்ளது.
சபரிமலையில் தற்போது 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் 2500 போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்த, மத்திய-மாநில படையினரின் ரகசிய நுண்ணறிவு பிரிவு போலீசாரின் அறிக்கைகளை பகிர்ந்து கொள்ள கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கண்காணிப்பு வீடியோ காமிராக்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்து பல இடங்களில் வைக்கப்பட உள்ளன. பாதுகாப்பு பற்றி கலந்து உரையாடுவதற்காக தினமும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.