அதிபர் தேர்தல்-தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டி
சென்னை: இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று அந்தக் கூட்டமைப்பின் எம்பியான சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இலங்கையில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழர்களை கொன்றொழித்த ராஜபக்சேவும், பொன்சேகாவும் எதிரெதிராக தேர்தல் களத்தில் நிற்கிறார்கள். இது தவிர தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த சிங்கள தலைவர் ஒருவர் இடதுசாரிகள் முன்னணி சார்பில் போட்டியிடுகிறார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரை ராஜபக்சேவையோ, பொன்சேகாவையோ நிச்சயமாக ஆதரிக்க முடியாது. இனப் படுகொலை செய்த இவர்களை ஆதரிக்கக் கூடாது என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பம்.
ராஜபக்சேவும், பொன்சேகாவும் தொடர்ந்து எங்களுக்கு தூது அனுப்பி வருகிறார்கள். ஆனால், எந்த நிலையிலும் இவர்களை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.
எங்கள் கூட்டமைப்பின் சார்பில் ஒரு தமிழ் வேட்பாளரை அதிபர் தேர்தலில் நிறுத்துவோம். தமிழர் வெற்றி பெற முடியாத நிலை இருந்தாலும் இலங்கை தமிழர்களின் உணர்வுகளை உலகம் அறிய செய்வதற்காக இந்த போட்டி அவசியமாகும்.
ஒருவேளை எங்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளரை அதிபர் தேர்தலில் நிறுத்தாவிட்டால் நானே சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன்
தமிழக எம்பிக்கள் பயணம் வேஸ்ட்:
இலங்கையில் போர் முடிவடைந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் அங்குள்ள தமிழ் மக்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. முள்வேலி முகாம்களில் உள்ள எந்த தமிழர்களையும் அவர்களுடைய வாழ்விடங்களில் இலங்கை அரசு மறு குடியமர்த்தம் செய்யவில்லை.
அவர்களை 50,000 பேர், 30,000 பேர் என்று முகாம்களில் இருந்து விடுவித்தார்கள். அவ்வாறு முகாம்களிலிருந்து வெளியேறிய மக்கள் வீடு, வாசல் இன்றி வசிப்பிடங்கள் ஏதுமின்றி அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். எங்கு செல்வது என்று தெரியாமல் அவர்கள் தவித்து வருகிறார்கள்.
எனவே ஐ.நாவும்ம், இந்திய அரசும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழர்களுக்கு அமைதியான வாழ்க்கை அமைத்துத் தர வேண்டும். அவர்கள் ஏற்கனவே வசித்த வாழ்விடங்களில் அவர்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும்.
முள்வேலி முகாம்களில் உள்ளவர்களை தவிர, 20,000க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்களும், தமிழ் இளம் பெண்களும் தனி இடங்களில் சிறை வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. அவர்களை பற்றிய முழு விவரங்களையும் இலங்கை அரசு வெளியிட வேண்டும்.
சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாகவே முகாம்களில் உள்ள தமிழர்களை இலங்கை அரசு வெளியேற்றியதே தவிர, தமிழக எம்.பிக்கள் குழுவின் பயணத்தால் அல்ல என்றார்.