லஞ்சமே விபத்துகளுக்கு காரணம்: விஜயகாந்த்
சென்னை: லஞ்சம் வாங்கிக் கொண்டு போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்தாமல், கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் விபத்துகளுக்கு காரணம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சற்றும் எதிர்பாராத வகையில் திடுக்கிடும் இரண்டு செய்திகள் நம்மை அதிரவைத்துள்ளன.
வேதாரண்யம் அருகில் 25 பள்ளிக் குழந்தைகளோடு 2 ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற வேன் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் ஒரு ஆசிரியையும், 9 குழந்தைகளும் இறந்துள்ளனர். 11 குழந்தைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதுபோல, ஆத்தூருக்கு அருகில் 40 பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் மரத்தில் மோதி கவிழ்ந்ததில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதில் டிரைவரும், 4 குழந்தைகளும்
கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்று தெரிகிறது.
அரசு நிர்வாகங்களில் எங்கும் லஞ்சமும், ஊழலும் தாண்டவமாடுவதே இதற்கெல்லாம் காரணம். சாலை போடும் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்குவது, லஞ்சம் வாங்கிக் கொண்டு வாகன உரிமம் ஓட்டுநர் உரிமம் வழங்குவது தான் விபத்துகளுக்கு காரணம்.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டுவது, அதிக வேகம் மற்றும் அளவுக்கு அதிகமாக வேன்களில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றுவது ஆகியவற்றை லஞ்சம் பெற்றுக் கொண்டு கண்டுகொள்ளாமல் விடுவதுதான் இதுபோன்ற விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது.
போக்குவரத்துத் துறையின் நிர்வாகச் சீர்கேட்டுக்கு நாம் தரும் விலையே இந்த குழந்தைகளின் மரணங்கள்.
குழந்தைகளை இழந்து துயருறும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.
குற்றவாளிகள் மீது நடவடிக்கை-சிபிஎம்:
இச்சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பள்ளி, கல்லூரி வாகனங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்கப்படுகின்றனவா? தகுதிச் சான்றுகள் பெற்றுள்ளனவா? அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றிச்செல்கிறதா? போன்றவைகளை அரசு சரியாக அமலாக்காத காரணத்தினால் தான் இத்தகைய விபத்துக்கள் நடப்பது தொடர்கின்றன.
இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு அரசு கூடுதல் நஷ்டஈடு வழங்க வேண்டும். காயமுற்றவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.
விபத்திற்கான காரணங்களை ஆய்வு செய்து விதிமுறையை மீறியது யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
உரிய நடவடிக்கை-தா.பாண்டியன்:
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குளத்தில் வேன் கவிழ்ந்து குழந்தைகளும், ஆசிரியையும் உயிரிழந்து விட்ட நெஞ்சை உருக்கும் செய்தி அறிந்து ஆழ்ந்த கவலைக்குள்ளானோம். அந்த மழலையர் பள்ளி அரசு அங்கீகாரம் பெறாத ஒன்று எனவும், அந்த வாகனத்திற்கும் உரிய சான்றிதழ்கள் இல்லை எனவும் பெற்றோர் கூறுகின்றனர்.
இவை பற்றி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம். அரசு குழந்தைகள் பயிலும் பள்ளிகள் அனைத்தையும் அதிகாரிகளை கொண்டு மேற்பார்வை செய்யவும், கண்காணிக்கவும், அவர்களது வாகனங்களை சோதித்து அனுமதி வழங்கிடவும் வற்புறுத்துகிறோம்
என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications