சொத்துக் கணக்கு: அனிதா மனுவை தள்ளுபடி செய்ய அதிமுக கோரிக்கை!
திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு பரிசீலினை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது, அதிமுக சார்பில் வக்கீல்கள் யு.எஸ்.சேகர் மற்றும் அதிமுக வக்கீல்கள் தேர்தல் அதிகாரியிடம் ஒரு மனு அளித்தனர்.
அதில், திமுக சார்பில் போட்டியிடும் அனிதா ராதாகிருஷ்ணன் தன்னுடைய சொத்துக்களை முழுமையாக காட்டவில்லை. அதனால் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால், இந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இதையடுத்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அனிதா ராதாகிருஷ்ணன் மீது 3 வழக்குகள் உள்ளன. இவை வாக்காளர் பட்டியல் மோசடி செய்த வழக்குகள் ஆகும். இதை அவரது மனுவில் காட்டவில்லை.
அவரது டாடா சுமோ காரை வேட்பு மனுவில் காட்டவில்லை. குதிரைமொழி பஞ்சாயத்தில் உள்ள 2.42 ஏக்கர் நிலத்தில் 6ல் ஒரு பங்கு அனிதா ராதா கிருஷ்ணனுக்குரியது.
புன்னக்காயல் 11.78 ஏக்கர் இடம் அனிதா ராதாகிருஷ்ணன் மனைவி பெயரில் உள்ளது. இதையெல்லாம் சொத்துக் கணக்கில் அவர் காட்டவில்லை.
இதுபோக அனிதா ராதாகிருஷ்ணனிடம் உள்ள துப்பாக்கிகளையும் கணக்கில் காட்டவில்லை.
மேலும் மதுரையில் உள்ள பல சொத்துக்களையும் கணக்கில் காட்டவில்லை. இதனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 30ன் படி அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்யலாம். ஆனால் எங்கள் கோரிக்கை தேர்தல் அதிகாரி ஏற்க மறுத்துவிட்டார்.
இதனால் நாங்கள் தேர்தல் ஆணையரிடம் புகார் செய்ய உள்ளோம் என்றனர்.