சென்னை ஏர்போர்ட்டில் வெடிகுண்டு பீதி- நள்ளிரவில் பதட்டம்
சென்னை: வெடிகுண்டு இருப்பதாக பரவிய தகவலால் நள்ளிரவில் ஒன்றரை மணிநேரம் சென்னை விமான நிலையம் பதட்டத்துடன் காணப்பட்டது.
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இன்று சென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அண்ணா பன்னாட்டு முனையம் அருகே உள்ள குப்பைத்தொட்டியில் ஒரு 'மர்ம பை' கிடந்தது. அதில் வெடிகுண்டு இருக்கலாம் என சிலர் கூறியதால் திடீர் பீதி ஏற்பட்டது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மோப்ப நாயுடன் வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவில் பன்னாட்டு விமானங்கள் போக்குவரத்து அதிகம் என்பதால், அங்கு கூட்டமும் அதிகமாக இருந்தது. வெடிகுண்டு பீதியால் மக்கள் அலறியடித்து அங்குமிங்கும் ஒடினர்.
இதற்கிடையே குப்பைத் தொட்டியில் கிடந்த பையை வெடிகுண்டு நிபுணர்கள் வெளியே எடுத்தனர். அதை கவனமுடன் பிரித்து பார்த்த போது அதில், எதுவுமில்லை. யாரோ அதை வீசி எறிந்து சென்றிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் விமான நிலைய வளாகம் நள்ளிரவில் சுமார் ஒன்றரை மணி நேரம் பீதியுடன் காணப்பட்டது.












Click it and Unblock the Notifications