சிவில் அணு சக்தி ஒப்பந்தம்- இந்தியா, ரஷ்யா கையெழுத்திட்டன
அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை விட இது சிறந்தது என்று இந்தியா ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா சென்றுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். அவருக்கு அதிபர் மெட்வதேவ் விருந்து அளித்தார். மாஸ்கோ புறநகர் பகுதியான பார்விகாவில் உள்ள அதிபர் வீட்டில் இந்த விருந்து நடந்தது.
விருந்து நிகழ்ச்சியில் மெட்வதேவ் கூறும்போது, ரஷியாவும், இந்தியாவும் மிகவும் நட்பு நாடாக உள்ளன. பிரதமர் மன்மோகன் சிங்குடன் அலுவல் ரீதியாக மட்டும் அல்லாமல் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசுவதற்கு ஆசைப்படுகிறேன் என்றார்.
பதிலுக்குப் பிரதமர் மன்மோகன்சிங் கூறும்போது இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே உயர்ந்த நட்பு உள்ளது. அதுவும் மெட்வதேவ் அதிபராக இருக்கும் இந்த நேரத்தில் நட்பு மேலும் வலுவாகி இருக்கிறது.
இந்தியாவுக்கு மற்ற நாடுகளுடன் இருக்கும் நட்பை விட ரஷியாவுடன் இருக்கும் நட்பு மிகச் சிறந்த நட்பாகும். இந்த நட்பு எப்போதும் தொடரும் என்று உறுதி அளிக்கிறேன் என்றார்.
இன்று மன்மோகன் சிங்கும், மெட்வதேவும் மீண்டும் சந்தித்து பேசுசினர். அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகையான கிரெம்ளின் மாளிகையில் இந்த சந்திப்பு நடந்தது.
அப்போது இரு நாடுகளுக்கு இடையே சிவில் அணு சக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சிவில் அணு சக்தி ஒப்பந்தத்தில் மன்மோகன் சிங்கும், மெத்வதேவும் கையெழுத்திட்டனர்.
அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தை விட இந்த ஒப்பந்தம் சிறந்ததாக வர்ணிக்கப்படுகிறது.
அணு தொழில்நுட்ப மாற்றம், தடையில்லா யுரேனியம் சப்ளை உள்ளிட்டவற்றுக்கு இந்த ஒப்பந்தம் வழி வகுக்கிறது.
இந்த ஒப்பந்தம் தவிர பாதுகாப்புத் துறை தொடர்பான 3 ஒப்பந்தங்களும் கூட இன்று கையெழுத்தாகின.
இதையடுத்து சிங்கும், மெத்வதேவும், பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினர்.
பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது மன்மோகன் சிங் கூறுகையில், இன்று இரு நாடுகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது மிகவும் விசாலமானது என்றார் சிங்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து பிரதமர் புதினை சந்திக்கிறார் மன்மோகன் சிங். முன்பு அதிபராக இருந்தபோது புதினை அவர் சந்தித்துள்ளார். தற்போது பிரதமராக அவரை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.