கல்பாக்கம் அதிவேக உலை: முக்கிய கலன் பொருத்தப்பட்டது
சென்னையை அடுத்த கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் 2வது கட்டமாக ரூ.3,492 கோடி செலவில் அதிவேக ஈனுலை (Fast breeder reactor) அமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது 50 சதவீத கட்டிட பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த பணிகள் 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவடையும்.
இந்த நிலையில், அதிவேக ஈனுலையை சுற்றி ரூ.20 கோடி செலவில், பிரமாண்ட பாதுகாப்பு கவசத்தை (Safety Vessel) அமைக்கும் பணி நடந்தது.
இந்த பாதுகாப்பு கவச கலன் 13.5 மீட்டர் சுற்றளவும், 13.5 மீட்டர் உயரமும் 80 டன் எடையும் கொண்டதாகும். ராட்சத கிரேன் மூலம் இது கடந்த ஆண்டு ஜன் மாதம் தூக்கி வைக்கப்பட்டது.
இந்தப் பணியை முடிக்க கிட்டத்தட்ட 8 மணி நேரம் பிடித்தது. இதையடுத்து தற்போது பாதுகாப்பு கலனுக்குள் முதன்மைக் கலன் மற்றும் உள் கலனை பொருத்தும் பணி நடந்துள்ளது.
முதல் கட்டமாக முதன்மைக் கலனை பாதுகாப்பு கலனுக்குள் நிறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து கல்பாக்கம் அணு மின் நிலைத் திட்ட இயக்குநர் பிரபாத் குமார் கூறுகையில், இதை அமைதியான முறையில் கடந்த சில காலமாக செய்து வந்தோம். இடையில் மழை வந்ததால் இந்தப் பணி தாமதப்பட்டது. தற்போது வானம் தெளிவாக உள்ளதால் முதன்மைக் கலனை பொருத்தும் பணியை மேற்கொண்டோம்.
சனிக்கிழமை முதன்மைக் கலனை பாதுகாப்புக் கலனுக்குள் பொருத்தும் பணி முடிவடைந்தது என்றார்.
முதன்மைக் கலனின் எடை 206 டன்களாகும். இதன் சுற்றளவு 12.9 மீட்டர். உயரம் 12.94 மீட்டராகும்.
இந்தப் பணி முடிவடைந்துள்ளதன் மூலம் 2011ம் ஆண்டுக்குள் 500 மெகாவாட் மின்திறனை உற்பத்தி செய்யும் இலக்கு குறித்த நேரத்தில் நிறைவேறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.