பஸ் மோதி இன்ஸ்பெக்டர் பலி-3 போலீசார் காயம்
தேனி: நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது அரசு பஸ் மோதியதில், இன்ஸ்பெக்டர் அதே இடத்தில் பலியானார். மூன்று போலீசார் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, தேனி அல்லி நகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஆரோக்கியதாஸ் தலைமையில் மூன்று ஏட்டுகள், ஐந்து பெண் போலீசார், பெரியகுளம் ரோடு அன்னஞ்சி விலக்கில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, நள்ளிரவு ஒரு மணிக்கு அந்த வழியாக வந்த ஜீப்பை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, திண்டுக்கலில் இருந்து போடி நோக்கி வேகமாக வந்த அரசு பஸ், ஜீப் மீதும் போலீசார் மீதும் மோதியது.
இதில், இன்ஸ்பெக்டர் அந்தோணி ஆரோக்கியதாஸுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் பலியானார்.
அவருடன், சோதனையில் ஈடுபட்டிருந்த ஏட்டு ஜெகன்னாதன், சிறப்பு பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த ராஜபாளையம் 11வது பட்டாலியன் பெண் போலீசார் ஜெயலட்சுமி, கனகாதேவி ஆகியோரும் படுகாயமடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏட்டு ஜெகன்னாதன் ஆபத்தான நிலையில் உள்ளார்.
விபத்திற்கு காரணமான, அரசு போக்குவரத்து டிரைவர் இளையராஜாவை (33) அல்லி நகரம் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் பஸ் ஓட்டியதால் டிரைவர் தூக்க கலகத்தில் விபத்தை ஏற்படுத்தியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.