காதலிக்கு துரோகம்: மணமேடையில் மாப்பிள்ளை கைது
பள்ளிப்பட்டு: துரோகம் செய்த காதலனின் திருமணத்தை காதலி தடுத்து நிறுத்தினார். காதலியை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணுக்கு தாலி கட்ட இருந்த மணமகனை போலீசார் திருமண மண்டபத்திலேயே கைது செய்தனர்.
திருத்தணி அருகே பள்ளிப்பட்டில் ஜனார்த்தனம் என்பவர் சோப்பு ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது கடையில் கோணேட்டம்பேட்டை கிராமத்தை சேர்ந்த ஜோதி (25) வேலை செய்து வந்தார்.
ஜனார்த்தனம், ஜோதி இடையே நெருக்கம் ஏற்பட்டது. ஜோதியை திருமணம் செய்து கொள்வதாக ஜனார்த்தனம் கூறியதால், இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் ஜனார்த்தனம் திடீரென வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இவர்களது திருமணம் திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று காலை நடைபெறுவதாக இருந்தது.
இதுபற்றி கேள்விப்பட்ட ஜோதி அதிர்ச்சியடைந்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டு ஜனார்த்தனம் வேறு பெண்ணை திருமணம் செய்வதாக திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜோதி புகார் செய்தார்.
இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமண மண்டபத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு வரவேற்பு நிகழ்ச்சியில் இருந்த மணமகன் ஜனார்த்தனத்தை கைது செய்தனர். இதனால் நேற்று நடைபெற இருந்த அவரது திருமணம் நின்றுபோனது.