மே.வங்கத்தில் மமதாவுக்கு முதல்வர் பதவி-பிரணாப்
கிருஷ்ணநகர் (மேற்கு வங்கம்): மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலில் திரினமூல் காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் மமதா பானர்ஜிதான் முதல்வராக்கப்படுவார் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் வருகிறது. அதற்கு முன்பாகவே தேர்தலை நடத்தி விட மமதா துடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் காங்கிரஸ் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம் கிருஷ்நகருக்கு வந்த பிரணாப் முகர்ஜி அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ், திரினமூல் காங்கிரஸ் இடையிலான கூட்டணி மிகச் சரியான நேரத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒன்று.
இடதுசாரி கட்சிகளை மேற்கு வங்க ஆட்சி பீடத்திலிருந்து விரட்ட தீட்டப்பட்ட கூர்மையான கத்தி இந்தக் கூட்டணி.
இந்த கூட்டணி வீணாகி விடக் கூடாது. தொடர்ந்து வலுவான உறவு நீடிக்க வேண்டும்.
2001ம் ஆண்டிலும் கூட திரினமூல் காங்கிரஸுடன் காங்கிரஸ் உறவு வைத்திருந்தது. அப்போது மமதா பானர்ஜியைத்தான் முதல்வராக முன்நிறுத்தினோம்.
இப்போது அதில் எந்த மாற்றமும் இல்லை. இப்போதும் சட்டசபைத் தேர்தலில் எங்களது கூட்டணி வெற்றி பெற்றால் மமதாதான் முதல்வராவார் என்றார் பிரணாப்.
அதேசமயம், மமதா விஷயத்தில் காங்கிரஸ் கவனமாக இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை அழித்து விட்டு மமதாவுடன் உறவு என்பதை ஏற்க முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷியின் மனைவி தீபா கூறியுள்ளார்.
எம்.பியான தீபா இதுகுறித்துக் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட நிர்வாகங்களை சீர்குலைக்கும் வகையில் கூட்டணி அமைந்து விடக் கூடாது.
கூட்டணிக்காக எதையும் தியாகம் செய்ய நாங்கள் தயார். அதேசமயம், காங்கிரஸ் அழிந்து போகும் வகையில் எதுவும் அமைந்து விடக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications