போலீசை கண்டித்து பஞ்சாபில் பந்த்- இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சண்டிகர்: லூதியானாவில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீக்கிய அமைப்புகள் பஞ்சாப் முழுவதும் இன்று பந்த் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திவ்யஜோதி ஜாக்ரன் சன்ஸ்தான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று நடத்திய கூட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார். இதை கண்டித்து இன்று மாநிலம் தழுவிய பந்திற்கு சீக்கிய அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.
அத்தியாவசியப் பொருட்கள் தவிர கடைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்விக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பஞ்சாப் பல்கலைக்கழகம், பாபா ஃபாரித் பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் இன்று நடக்க இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் பந்த் காரணமாக அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெற்றதாக தகவல் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.