பிளாட்பார்ம் அமைக்கும் பணி-13ம் தேதி சென்டிரல் மூடப்படுகிறது!
சென்னை: சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் அமைக்கும் பணிக்காக டிசம்பர் 13ம் தேதி அது மூடப்படுகிறது. அங்கு வரும், அங்கிருந்து இயக்கப்படும் ரயில்கள் அன்றைய தினம் பெரம்பூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தை விரிவாக்கம் செய்யும் உச்சக்கட்டப் பணிகள் 13-ந்தேதி நடைபெற உள்ளன. இதனால் அன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை சென்ட்ரல் ரயில் நிலையம் மூடப்படுகிறது. எந்த ரயில்களும் புறப்பட்டு செல்லாது. நிலையத்துக்கு ரயில்களும் வராது.
இது போல மூர்மார்க்கெட் வணிக வளாகத்தில் இருந்து புறநகர் மின்சார ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக எழும்பூர், பெரம்பூர், ஆவடி, அரக்கோணம் ஆகிய இடங்களில் இருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதனால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் எழும்பூர், பெரம்பூர், பிராட்வே, கோயம்பேடு ஆகிய இடங்களில் இருந்து இரு மார்க்கங்களிலும் 200 சிறப்பு பஸ்களை மாநகர போக்குவரத்து கழகம் இயக்குகிறது.
13-ந்தேதி காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சிறப்பு பஸ்கள் அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் ஆகிய முக்கிய இடங்களில் நின்று செல்லும். சிறப்பு பஸ் சேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில் மாநகர போக்குவரத்து கழக பொது மேலாளர் தலைமையில் 3 பறக்கும் படைகள் செயல்படும்.
நேரக்காப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 100 பேர் கொண்ட குழு சிறப்பு பஸ் சேவையை கண்காணிக்கும். சிறப்பு பஸ் சேவைகள் குறித்து பொது மக்களுக்கு பிராட்வே, பெரம்பூர், திருவள்ளூர் ஆகிய பஸ் நிலையங்களில் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்படும்.
குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளும் செய்து தரப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.