மசூதி இடிப்பு சதி: வாஜ்பாய்க்கு தொடர்பில்லை-காங். திடீர் சர்டிபிகேட்
டெல்லி பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவருக்கு சதித் திட்டத்தில் தொடர்பு இருந்ததாக கூற முடியாது என்று காங்கிரஸ் திடீரென கூறியுள்ளது.
இதன் மூலம் எல்.கே.அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்களை அது நெளிய வைத்துள்ளது.
அதேசமயம், பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பிரதமராக இருந்த பி.வி. நரசிம்மராவ் குறித்து அது பாதுகாப்பான முறையில் கருத்து தெரிவித்துள்ளது.
லிபரான் கமிஷன் அறிக்கை குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போதுதான் வாஜ்பாய் குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்தது காங்கிரஸ்.
நரசிம்மராவையும், காங்கிரஸ் அரசையும் குற்றம் சாட்டி பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் பேசுகையில் குறுக்கிட்ட மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், லிபரான் கமிஷன் அறிக்கையில், பாபர் மசூதியை இடிக்க சதி செய்தவர்கள் பட்டியலில் வாஜ்பாய் பெயர் இல்லை. அவர் பெயர் வேறு ஒரு பட்டியலில்தான் உள்ளது என்று தெரிவித்தார்.
கருத்து கூற விரும்பவில்லை: ராகுல்
இந் நிலையில் இன்று லக்னோவில் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி,
உத்தரப் பிரதேச அரசியல் பழமையில் ஊறி இருக்கிறது. தற்போதைய சூழலுக்கு ஏற்ப மாநில அரசியலை மாற்றுவதே என் குறிக்கோள்.
வாஜ்பாய் இந்த நாட்டின் மிக மூத்த தலைவர். அவர் மீது எனக்கு தனி மரியாதை உண்டு. லிபரான் கமிஷன் அவர் மீது கூறியுள்ள புகார் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை.
காங்கிரஸ் கட்சியில் பிரதமராக என்னைவிட தகுதி வாய்ந்த ஏராளமானவர்கள் உள்ளனர் என்றார்.