மருத்துவமனையில் மாயமான நர்சிங் மாணவி காதலனுடன் மீட்பு
சென்னை: சென்னை அரசு மருத்துவமனையில் மாயமான நர்ஸ் பயிற்சி மாணவி, காதலனுடன் மீட்கப்பட்டார்.
திருநெல்வேலி, சங்கரன்கோவிலைச் சேர்ந்த பெண் சமுத்திரம் (18). இவர் சென்னையில் நர்ஸ் பயிற்சி பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த மாதம் 29ம் தேதி சென்னை அரசு பொது மருத்துவமனையில் பயிற்சியி்ல் இருந்தபோது திடீரென மாயமான முறையில் காணாமல்போனார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.
இந்நிலையில் வேலூர், திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சமுத்திரம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு சென்றபோது, சமுத்திரம் அங்கு திருமணமான நிலையில் இருப்பதாக கூறினார். அவரை போலீசார் ஜி.டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
மருத்துவமனையில் இருந்து மாயமானது குறித்து சமுத்திரம் கூறுகையில், 'நான் நர்சிங் பயிற்சிக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தபோது ஒரு வார்டில் அஞ்சலை என்ற பெண் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அஞ்சலையுடன் அவரது மகன் ராமு (24) என்பவரும் தங்கியிருந்தார்.
தொடர்ந்து நாங்கள் இருவரும் சந்தித்ததால் காதல் மலர்ந்தது. காதலை யாரும் பிரிக்கக் கூடாது என்பதற்காக 29ம் தேதி, ராமுவின் ஊரான திருப்பத்தூருக்கு சென்று விட்டோம். பின்னர் அங்கு உள்ள மலைக்கோவிலில் வைத்து நாங்கள் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டோம்.
நான் தொடர்ந்து நர்சிங் பயிற்சியை படிக்கப்போகிறேன். 1 வருடத்திற்கு பிறகு ராமுவை முறைப்படி திருமணம் செய்து கொள்வேன்' என்று போலீசிடம் கூறியுள்ளார்.