சந்திரசேகர ராவ் உடல்நிலை கவலைக்கிடம்

10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் சந்திரசேகர ராவ் ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல் நிலை குறித்து நிம்ஸ் இயக்குநர் டாக்டர் பிரசாத ராவ் கூறுகையில், சந்திரசேகர ராவின் உடல் நலம் மிகவும மோசமடைந்துள்ளது. அவர் உடனடியாக உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும். சாப்பிட்டே ஆக வேண்டும். இல்லாவிட்டால் விபரீதமாகி விட வாய்ப்புள்ளது.
அவரது சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவை இயல்பான நிலையில் இருந்தாலும் கூட புரதச் சத்து வேகமாக குறைந்து வருகிறது. இது பல சிக்கல்களுக்கு வித்திட்டு விடலாம். அவருக்கு தொற்று நோய் ஏற்பட்டு விபரீதமாகி விடக் கூடும் என்றார்.
இதுவரை 17 பேர் தற்கொலை..
இதற்கிடையே, தெலுங்கானா மாநில கோரிக்கைக்காக தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே 12 பேர் தெலுங்கானாவுக்காக தற்கொலை செய்திருந்தனர். நேற்று மேலும் 5 பேர் உயிரை மாய்த்துக்கொண்டதால் பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆகிவிட்டது.
நிஜமாபாத்தில் மாணவி தீக்குளிப்பு:
இந் நிலையில் இன்று நிஜாமாபாத்தில் ஒரு மாணவி தீக்குளித்து விட்டார்.
அவரது பெயர் ஜனா பாய். 17 வயதாகும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தெலுங்கானா போராட்டம் வலுத்து வருவதால் தெலுங்கானா பிராந்தியமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரசு சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. ரயில் போக்குவரத்து, பஸ் போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
சட்டப்பேரவையில் அமளி:
இதற்கிடையே, ஆந்திர மாநில சட்டசபையில் இன்று தெலுங்கானா மாநிலம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றக் கோரி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உறுப்பினர்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை ஒத்திவைக்கப்பட்டது.
ஆந்திர சட்டப்பேரவையில் தெலுங்கானா பற்றி விவாதிக்கக் கோரி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக் கோரி கோஷம் எழுப்பினர்.
இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதையடுத்து அவர்கள் அமளியில் இறங்கினர். இதையடுத்து சபை கால் மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications