காதலனுடன் பேச தீக்குளிப்பு மிரட்டல்: நள்ளிரவில் இளம்பெண் அட்டகாசம்
சென்னை: காதலனுடன் பேசுவதற்காக இரவு நேரத்தில் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிப்பு மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவியை போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
தாம்பரம் அருகே சேலையூரைச் சேர்ந்தவர் ரேவதி. 23 வயதான ரேவதி அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். ரேவதி தன்னுடன் படிக்கும் மாணவரை தீவிரமாக காதலித்து வந்தார். அந்த மாணவரின் வீடு ஆதம்பாக்கத்தில் உள்ளது.
நேற்று முன் தினம் இரவு காதலனை சந்தித்துப் பேச ரேவதி ஆதம்பாக்கம் சென்றார். ஆனால் அந்த மாணவரின் பெற்றோர் ரேவதியை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. ரேவதியை அங்கிருந்து விரட்டி விட்டனர்.
மனமுடைந்த ரேவதி, கடைக்கு சென்று சிறிய பாட்டிலில் மண்எண்ணெய் வாங்கினார். இரவு 10 மணியை தாண்டிய நிலையில் ஆதம்பாக்கத்தில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.
போலீஸ் நிலைய வாசலில் நின்று தீக்குளிக்கப் போவதாக கூச்சலிட்டார். சத்தம் கேட்டு போலீசார் வந்து விசாரித்தனர். அவர்களிடம் ரேவதி, காதலனுடன் என்னை பேச அனுமதிக்க வேண்டும் இல்லையெனில் இங்கேயே உடலில் மண்எண்ணை ஊற்றி தீ குளித்து செத்து விடுவேன் என்றார்.
அவரை சமரசம் செய்த போலீசார் மாணவரை வரவழைத்து பேசினார்கள். அப்போது அந்த மாணவர், நானும் ரேவதியும் பேசி பழகுவது உண்மை தான். ஆனால் நான் அவரை காதலிக்க வில்லை. நல்ல நண்பராக நினைத்தே பழகினேன் என்றார்.
ரேவதி இதை கேட்டு அதிர்ச்சியடைந்தார். இதற்கிடையே மகளை காணாமல் தவித்த ரேவதியின் பெற்றோர் சேலையூர் போலீசுக்கு சென்று புகார் செய்தனர். இதையடுத்து ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இருந்த ரேவதியை அவரின் பெற்றோர் வந்து அழைத்துச்சென்றனர்.