முத்துக்குமரன் பிறந்த மண்ணில் திமுகவுக்குத் தோல்வியைத் தாருங்கள் - வைகோ
திருச்செந்தூர்: இலங்கையில் இன அழிப்பு போருக்கு பீரங்கி வழங்கி உதவியது மத்திய அரசு. ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமரன் பிறந்த மண் இது. இந்த மண்ணின் மக்கள் திமுக கூட்டணியிலான மத்திய அரசிற்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
திருச்செந்தூர் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் அம்மன் நாராயணனை ஆதரித்து வைகோ பிரசாரத்தில் குதித்துள்ளார்.
ஆத்தூரில் பிரச்சாரத்தைத் தொடங்கி அவர் பேசுகையில்,
தமிழகத்தில் கருணாநிதி அரசாங்கத்தில் செயல்பாடுகள் சரியில்லை. ஜனநாயகம் மாறி பனநாயகமாக இருந்து வருகிறது.
இத்தொகுதியில் அமைச்சராக இருந்து செயல்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் தனது சுயலாபத்திற்காக அதிமுகவிலிருந்து பிரிந்து திமுகவில் சேர்ந்துள்ளார். இதனால் இத்தொகுதியில் இடைத் தேர்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் யாருக்கு நஷ்டம்? பொதுமக்களின் வரிப் பணம்தான் வீனாகிறது.
மத்திய அரசு இலங்கையில் இன அழிப்பு போருக்கு பீரங்கி வழங்கி உதவியது. ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமரன் பிறந்த மண் இது. இந்த மண்ணின் மக்கள் திமுக கூட்டணியிலான மத்திய அரசிற்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும். திமுகவினர் தற்போது தோல்வி பயத்தில் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அராஜகத்தை மீறி அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார். இடைத் தேர்தல் வெற்றியை பொதுமக்கள் அதிமுகவிற்கு அளித்தால் தமிழக அரசியல் வரலாற்றிலேயே மாற்றம் ஏற்படும். அதிமுக வேட்பாளர் அம்மன் டி நாராயணன் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றார் வைகோ.