இந்திய மாலுமிகள் திடீர் மாயம்- இலங்கை மீனவர்கள் கடத்தினார்களா?
சென்னை: இந்திய கடல் எல்லையில் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை மீனவர்களுடன் நடுக்கடலில் வந்துகொண்டிருந்த இந்திய கடற்படை மாலுமிகள் இருவரை காணவில்லை. அவர்களை இலங்கை மீனவர்கள் கடத்திச் சென்றார்களா என சந்தேகிக்கப்படுகிறது.
இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்ததாக இந்தாண்டில் மட்டும் இதுவரை 386 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை கைது செய்துள்ளது. 73 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை மீனவர்கள் மற்றும் படகுகள் கடந்த சில நாட்களாக அதிகளவில் கடற்படையினரிடம் சிக்கி வருகின்றன.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு இந்திய கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, 7 படகுகளில் இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அவர்களை சுற்றிவளைத்த கடற்படையினர் படகுகளை சென்னை கடற்கரை நோக்கி திருப்பினர்.
7 படகுகளிலும் கடற்படை மாலுமிகள் தலா இரண்டு பேரை அமர்த்தி சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தனர். அப்போது நடுக்கடலில் நள்ளிரவு நேரத்தில் ஒரு படகு மாயமாகிவிட்டது. அதில் இருந்த மாலுமிகள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.
கடற்படை விமானம் மற்றும் கப்பல்கள் மூலமாக தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த படகு கிடைக்கவில்லை. இதற்கிடையே, இந்திய கடற்படை மாலுமிகளுடன் சென்ற படகு இலங்கை கடற்கரையை அடைந்துள்ளதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ஆனால், மாலுமிகளின் கதி என்ன ஆனது என்பது பற்றி தகவல் இல்லை.
மாலுமிகளை மீனவர்கள் பிணைக் கைதிகளாக வைத்துக்கொண்டு இந்திய கடற்படை வசம் இருக்கும் மீனவர்களை விடுவிக்கக் கோருவார்கள் என புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக இலங்கை கடற்படையினரிடம் பேச்சுவார்த்தை நடத்த இந்திய தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.