பிரபாகரன் மரணம்... இந்தியாவிடம் ஆதாரம் தந்தது இலங்கை - ஆனால் இறப்புச் சான்றிதழ் தரவில்லை
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணம் குறித்த ஆதாரத்தை இன்று முறைப்படி இந்தியாவிடம் இலங்கை அரசு வழங்கியதாகத் தெரிகிறது. இருப்பினும் இறப்புச் சான்றிதழை அது தரவில்லை.
இறப்புச் சான்றிதழ் குறித்து இலங்கை சட்டத்துறை பரிசீலித்து வருவதாக இலங்கைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலைவழக்கு முடிவுக்கு வருகிறது. இந்த வழக்கை முடிக்கவே, இப்படியொரு சான்றை இலங்கை அரசாங்கம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
கடந்த மே மாதம் வன்னியில் நடந்த பெரும் போரின் இறுதியில் பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக உடலைக் காட்டியது இலங்கை.
ஆனால் இந்த உடல் பிரபாகரனுடையது அல்ல என்றும் அவர் உயிருடன் தப்பிச் சென்றுவிட்டார் என்றும் தமிழீழ ஆதரவாளர்கள் நம்பினர்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்ற வழக்கில் முதல் குற்றவாளியான பிரபாகரன் மரணம் குறித்த அதிகாரப்பூர்வ சான்றுகள் இந்தியாவுக்கு தேவைப்பட்டது. அப்போதுதான் ராஜீவ் வழக்கை முடிக்க முடியும் என்பதால், பிரபாகரன் மரணச் சான்றையும், இறப்புச் சான்றிதழையும் தருமாறு கோரப்பட்டது.
ஆனால் மவுனம் சாதித்து வந்தது இலங்கா. இப்போது, பிரபாகரன் நந்திக்கடல் அருகே கொல்லப்பட்டது உண்மையே என்றும் அதற்கான ஆதாரங்களையும் இந்தியாவிடம் காட்டியுள்ளதாம் இலங்கை. ஆனால் இன்னும் இறப்புச் சான்றிதழ் மட்டும் வழங்கப்படவில்லை. மேலும் பொட்டு அம்மானின் மரணம் குறித்தும் இலங்கை எதையும் கூறவில்லை.
இறப்புச் சான்றிதழ் இலங்கை சட்டத்துறை நிபுணர்கள் பரிசீலனையில் உள்ளதாக இலங்கைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பிரபாகரன் மரணச் செய்தி இன்னும் குழப்பமாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications