மீனவர்கள் ஆயுதம் ஏந்தி கடலுக்கு செல்லும் நிலை ஏற்படும் - வைகோ ஆவேசம்
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் ஆயுதம் ஏந்தி படகில் கடலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மனித உரிமை குடிமக்கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராசன் தலைமை வகித்தார். ஜெயராணி முன்னிலை வகித்தார்.
இந்த மாநாட்டில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசுகையில்,
தமிழகத்தில் ஒருகோடிக்கும் மேற்பட்ட மீனவர்களை வஞ்சி்க்கும் வகையில் கொடுமையான சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இது போன்ற கொடூரமான சட்டத்தை, எந்த நாடும் இதுவரை கொண்டு வந்ததில்லை.
தமிழக மீனவர்கள் ஆயுதம் ஏந்தி படகில் கடலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இலங்கை தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் எதிரான மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசை மக்களே தூக்கியெறியும் காலம் விரைவில் வரும் என்றார்.
இந்த மாநாட்டில் சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசை மாணிக்கம், விவேகானந்தா குடில் நிர்வாகி சுவாமி பிரணவானந்தா, இலங்கை தேசிய மீனவர் தோழமை இயக்க பிரதிநிதி ஹெர்மன்குமாரா, தமிழர் தேசிய இயக்க தலைவர் நெடுமாறன், தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி செயலாளர் மணியரன், த.மு.மு.க.மாநில பொது செயலாளர் ஹைதர்அலி, அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மதச்சார்பற்ற ஜனதாதளம் மாநில செயலாளர் ஜான்மோசஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications