'குவார்ட்டர்' பூஜை நடத்திய ஜோதிடர்-வெளுத்துக்கட்டிய மக்கள்
இடைப்பாடி: நிலத்தில் உள்ள புதையலை எடுத்துத் தருவதாகக் கூறி நள்ளிரவில் பிராந்தி பூஜை நடத்தி மோசடி செய்த ஜோதிடரை கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.
கொங்கணாபுரம் அருகே உள்ள தங்காயூர் மணமேடு பகுதியை சேர்ந்த முத்துசாமி. விவசாயியான இவர் உறவினரின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
ஒரு வாரம் முன்பு திருப்பூரை சேர்ந்த ராஜேந்திரன் (48) என்ற ஜோதிடர் தங்காயூர் பகுதிக்கு ஜோதிடம் பார்க்க வந்துள்ளார்.
முத்துசாமி, தன் குடும்பத்தினரின் ஜாதகத்தை ஜோதிடர் ராஜேந்திரனிடம் காட்டினார்.
அப்போது, 'உங்களுக்கு நேரம் நன்றாக உள்ளது. நீங்கள் விவசாயம் செய்யும் நிலத்தில் புதையல் உள்ளது. அதை கண்டுபிடித்து எடுக்க ரூ.30,000 செலவாகும்' என்று ஜோதிடர் கூறியுள்ளார்.
ஜோதிடரை நம்பிய முத்துசாமி முதல்கட்டமாக ரூ.10,000 கொடுத்துள்ளார். முதலில் ஜோதிடர் அந்த மண்ணை வைத்து வேறு இடத்தில் பூஜை செய்தார். பின் நேற்று முன்தினம் வந்து நள்ளிரவு பூஜை நடத்த வேண்டும் என ஜோதிடர் கூறினார்.
5 கோழி, 50 பாட்டில் குவார்ட்டர் பிராந்தி ஆகியவற்றை வாங்கிவரச் சொல்லி பூஜை செய்தார். பூஜை முடித்த பின் குவார்ட்டர் பாட்டில்களை காலி செய்யுமாறு மற்றவர்களை வற்புறுத்தி, தானும் குடித்தார் ஜோதிடர்.
அனைவரும் போதையில் இருந்த சமயத்தில், ஜோதிடர் ராஜேந்திரன் தான் ஏற்கனவே பையில் மறைத்து கொண்டு வந்த மீனாட்சி சிலை, புத்தர் சிலை, அம்மன் சிலையை எடுத்து, 'புதையல் கிடைத்துவிட்டது' என ஆரவாரமாக கத்தினார்.
புதையல் என்றால் பணமோ தங்கமோ இருக்கும் என நினைத்திருந்த கிராமத்தினர், சிலைகளை கண்டதும் ஆத்திரமடைந்தனர். மேலும் ஜோதிடர் பையில் இருந்து சிலைகளை எடுத்ததையும் அருகில் இருந்தவர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.
இதில் மிகவும் ஆத்திரமடைந்த முத்துசாமி, பெருமாள், தியாகராஜன் உள்ளிட்டவர்கள் நள்ளிரவில் அதே இடத்தில் ஜோதிடர் ராஜேந்திரனை நையப் புடைத்தனர்.
மேலும், ஜோதிடரின் மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, 'எங்களை ஏமாற்றிய உங்கள் கணவரை பிடித்து வைத்திருக்கிறோம். ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்துவிட்டு கணவரை மீட்டு செல்லுங்கள்' என்று முத்துசாமி உள்ளிட்டோர் மிரட்டினர்.
ஜோதிடர் மனைவி மணி, இதுகுறித்து இடைப்பாடி போலீசிடம் உடனடியாக புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று இருதரப்பையும் சமாதானம் செய்து ஜோதிடரை மீட்டனர்.
புதையலில் எடுத்ததாக கூறப்பட்ட மூன்று சிலைகள் கைப்பற்றப்பட்டது. இரண்டு தரப்பில் இருந்தும் புகார்கள் பெற்றுக்கொண்ட போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு ஜோதிட மோசடி...:
நாகர்கோவில் அருகே மாணவாளக்குறிச்சியைச் சேர்ந்தவர் சுயம்புராஜன், டிரைவர். இவரது மனைவி சத்யஸ்ரீ. இவர்களுக்கு திருமணம் ஆகி 8 மாதங்கள் ஆகின்றன.
கடந்த 5ம் தேதி இரவு இவர்களது வீட்டுக்கு குறி சொல்வதாக கூறி ஒருவர் வந்துள்ளார். சுயம்புராஜன் வீட்டுக் கதவை திறந்ததும் ஜக்கம்மா, வந்திருக்கா, ஜக்கம்மா வந்திருக்கா, என சுயம்புவின் கடந்த கால சம்பவங்களை பட்டியலிட்டுள்ளார்.
மேலும், 'உங்களுக்கு செய்வினை வைத்திருக்கிறார்கள், எனவே குழந்தை பிறக்காது' என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். மறுநாள் சுயம்புராஜன் இல்லாத சமயத்தில் சத்யஸ்ரீயிடம் நயமாக பேசி, 'செய்வினையை போக்க வேண்டுமானால் நகைகளை வைத்து மந்திரித்து பூஜை, பரிகாரங்கள் செய்ய வேண்டும். அப்புறம் ஒரு பிரச்னையும் இல்லை' என கூறியுள்ளார்.
இதனை நம்பிய சத்யஸ்ரீ தான் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினையும் பணம் 5 ஆயிரத்தையும் கொடுத்துள்ளார். நகை, பணத்தை பெற்றுக் கொண்ட அந்த நபர் பூஜை செய்வதற்கு 3 நாட்கள் தேவைப்படும் என கூறி நகையோடு அங்கிருந்து சென்றுள்ளார்.
3 நாட்கள் கடந்தது. ஆனால் நகையை கொண்டு சென்ற ஜோதிடரை காணவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டால் அது ஆப் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 நாட்கள் கடந்தும் ஜோதிடர் வராததால் சத்யஸ்ரீ தனது கணவரிடம் நடந்த சம்பவங்களை கூறினார்.
அப்போதுதான் சுயம்புராஜனுக்கு தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. அவர் இதுகுறித்து மண்டைக்காடு போலீசில் புகார் செய்துள்ளார். அந்த ஜோதிடர் இதுபோலவே மேலும் 4 பேரிடம் தோஷம் இருப்பதாக கூறி 20 பவுனுக்கு மேல் நகையை திருடிச் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications