கோர்ட்டுக்கு ஆயுதங்களுடன் வந்த 9 பேர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி கோர்ட்டுக்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த 9 பேர் கொண்ட கும்பலைப் போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே ராஜூவ்நகரை சேர்ந்தவர் காட்டுராஜா. லோடுமேன். இவரை கடந்த 2008ல் கமுதியை சேர்ந்த முருகேசன் மற்றும் விருதுநகர் மாவட்டம் தெப்பலாங்கரையை சேர்ந்த சுப்பிரமணியன் ஆகியோர் சராமரியாக குத்தி கொலை செய்தனர். இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி இரண்டாவது விரைவு கோர்ட்டில் நடந்து வருகிறது.
நேற்று இந்த வழக்கு விசாரணையில் ஆஜராக விருதுநகரில் இருந்து முருகேசன் மற்றும் சுப்பிரமணியன் இருவரும் ஒரு காரில் தூத்துக்குடி கோர்ட்டிக்கு வந்தனர். அவர்கள் இருவரும் விசாரணைக்காக கோர்ட்டிற்குள் சென்றனர்.
காரின் அனைத்து கண்ணாடிகளும் ஏற்றி விடப்பட்ட நிலையில் அதற்குள் ஆட்கள் இருப்பது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. சப்-இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் அந்த காரை மடக்கி சோதனை போட்டனர்.
அப்போது காருக்குள் அரிவாள், உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் 7 பேர் பதுங்கியிருந்தது தெரிய வந்தது. போலீசார் மடக்கியதும் அங்கிருந்த கும்பல் தப்பியோடி முயன்றது.
அவர்களை போலீசார் கைது செய்தனர். காரில் இருந்த 2 அரிவாள், 5 உருட்டு கட்டைகளை பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்களிடம் தென்பாகம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் விசாரணைக்காக வந்துள்ள முருகேசன் மற்றும் சுப்பிரமணியன் பாதுகாப்பிற்கு வந்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.