பெரும் நஷ்டம்-சென்னை ஏசி பஸ்கள் குறைப்பு
சென்னையில் கோயம்பேடு பஸ் நிலையம், வேளச்சேரி, மகாபலிபுரம், கேளம்பாக்கம், திருவான்மியூர், பெரம்பூர், பிராட்வே, அய்யப்பன்தாங்கல் ஆகிய பகுதிகளுக்கு குளுகுளு வசதியுடன் வால்வோ பஸ்களை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்கிவருகிறது.
இந்த வகையில் தற்போது மொத்தம் 40 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. கோடை காலத்தில் பயணிகள் இவற்றை விரும்பி பயன்படுத்தினர். ஆனால் மழை நேரத்தில் ஏசி பஸ்களில் கூட்டம் இல்லை.
'பீக் அவர்' எனப்படும் காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் மட்டும் ஓரளவு கூட்டம் இருக்கிறது. மற்ற சமயங்களில் காலியாகவே ஓடுகின்றன.
தினசரி ரூ.18 ஆயிரத்திற்கு குறையாமல் வருவாய் இருந்தால் தான் ஏசி பஸ்களை நஷ்டப்படாமல் இயக்க முடியும். ஆனால் தற்போது இவற்றின் மூலம் தினசரி ரூ.9000, ரூ.10,000 தான் வருவாய் கிடைக்கிறது.
கோடைக்காலத்தில் இது ரூ.12,000, ரூ.13,000 வரை இருந்தது. இதுவரை ஏசி பஸ்கள் லாபத்தை எட்டவில்லை. தொடர்ந்து நஷ்டத்தில்தான் இயங்குகிறது.
மாநகர போக்குவரத்து அதிகாரிகள் வருவாயை பெருக்குவதற்கு அருகில் உள்ள காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு கூட இந்த பஸ்களை இயக்குகிறார்கள். ஆனாலும் வருவாய் அதிகரிக்கவில்லை.
இதனால், மாநகர போக்குவரத்து கழகம் இயக்கிய 40 பஸ்களில் 10 ஏசி பஸ்கள் விழுப்புரம் கோட்டத்துக்கு தரப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதிகளை மையமாக வைத்து சென்னையில் இருந்து இயக்கப்பட்ட பஸ்கள் காஞ்சீபுரம் கிளைக்கு மாற்றப்பட்டுள்ளது.
தியாகராயநகர்- மகாபலிபுரம், கேளம்பாக்கம் பகுதிகளுக்கு விடப்பட்ட பஸ்களை விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் கடந்த ஒரு வாரம் முதல் இயக்கி வருகிறது.