சென்னையில் சிஇஓ லைப்ஸ்டைல் ஷோ மற்றும் முதலீட்டாளர் மாநாடு!
சென்னை: சென்னையை முன்பெல்லாம் கட்டுப்பெட்டிகளின் நகரம் என்பார்கள். ஆனால் இன்று நிலைமை வேறு-
இரு தினங்களுக்கு முன் சென்னை வர்த்தக மையத்தில் ஒரு கண்காட்சி போட்டிருந்தார்கள். 'சிஇஓ லைப்ஸ்டைல் ஷோ' என்று பெயர். உள்ளே நுழைய கட்டணமே ரூ.2,000. அப்படி என்ன இருந்தது உள்ளே?
சைக்கிள் முதல் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வரை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
சைக்கிளின் குறைந்தபட்ச விலை ரூ.38,000. அதிகபட்ச விலை ரூ 2.6 லட்சம் தான்!
ரூ.65 லட்சத்தில் துவங்கி ரூ. 6 கோடி வரை மதிப்புள்ள கார்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. எதற்காக இவ்வளவு காஸ்ட்லி சமாச்சாரங்கள்? இங்கே யார் வாங்குவார்கள்? என்று அந்த ஷோவை நடத்திய ஸ்பார்க் கோபிடல் நிறுவனத்தின் ராமகிருஷ்ணனிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் இது:
"சென்னை இப்போது முன்பு மாதிரி இல்லை. தென் இந்தியாவின் ஐ.டி. மையம் இது. சிஇஓக்களின் நகரமாக மாறிவருகிறது. ஒரு சிஇஓ என்றால் அவர்களுடைய லைப்ஸ்டைல் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிவிக்கும் ஒரு தளமாக இந்த கண்காட்சி அமைந்திருந்தது. இந்த்க கண்காட்சிக்கு வந்த கூட்டம் எங்கள் நினைப்பு சரிதான் என்பதை உறுதிப்படுத்தியது...", என்றார்.
முதலீட்டாளர் கருத்தரங்கம்:
இந்தக் கண்காட்சி தவிர முக்கியமானதொரு கருத்தரங்கையும் நடத்தியது ஸ்பார்க் கேபிடல், இதே இடத்தில். இந்த இரண்டு நாள் முதலீட்டாளர் கருத்தரங்கில் 52 முதலீட்டாளர்கள் பங்கேற்றனர். தென்னிந்தியாவிலிருந்து மட்டும் 32 நிறுவனங்கள் இதில் பங்கேற்றனவாம்.
பல்வேறு துறையிலும் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாம். முதலீட்டாளர்களும் அவர்கள் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனப் பிரதிநிதிகளும் சந்தித்து உரையாடவும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது.
ஆனால் இவற்றைக் கவரேஜ் செய்ய மீடியா அனுமதிக்கப்படவில்லை. கடைசியாக நடந்த நிதி அமைப்புகள் மற்றும் மைக்ரோ பைனான்ஸிங் நிறுவனங்கள் குறித்த கருத்தரங்குக்கு மட்டும் மீடியா அனுமதிக்கப்பட்டது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியன் தலைவர் எஸ் ஏ பட், ஸ்ரீராம் குழுமத்தின் நிறுவனர் தியாகராஜன் மற்றும் ஈக்விடாஸ் மைக்ரோ பைனான்ஸ் நிர்வாக மேலாளர் வாசுதேவன் ஆகியோர் இந்த மாநாட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற முக்கியமானவர்கள்.
வங்கி அமைப்புகளுக்கும் வங்கி சாராத அமைப்புகளுக்கும் இடையே போட்டி மனப்பான்மை உள்ளதாக ஸ்ரீராம் குழுமத் தலைவர் கூறினார். அதற்கு பதிலளித்த ஐஓபி தலைவர், "இந்தப் போட்டி கூட தொழில் வளர்ச்சிக்கு உதவக்கூடியதுதான். அதேநேரம் பயன்படுத்தப்பட்ட ட்ரக்குகள் போன்றவற்றுக்கான நிதி வழங்கலில் ஐஓபி போன்ற வங்கிகள் ஈடுபடுவதில்லை. அங்கு வங்கியல்லாத நிதி அமைப்புகள்தான் உதவ முடியும்" என்றார்.
"ஆனால் சர்வதேச பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை அமெரிக்க வங்கிகள் தாங்கிக் கொண்டது போல,இந்திய வங்கிகளால் தாங்க முடியவில்லை" என்றார் பட்.