ஜெ. ஹெலிகாப்டர் பயணம் ரத்து- நயினார் ஹோட்டலில் ரெய்ட்
சென்னை:
இடைத் தேர்தலை முன்னிட்டு கடந்த 12 மற்றும் 13ம் தேதிகளில் திருச்செந்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்தார் ஜெயலலிதா. இதற்காக சென்னையிலிருந்து தனி விமானத்தில் தூத்துக்குடி சென்றார். பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு நேற்று தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
இந் நிலையில் இன்று வந்தவாசி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனுசாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்தவற்காக ஹெலிகாப்டர் மூலம் வந்தவாசி செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், புயல்-மழை சூழலால் மோசமான வானிலை நிலவயிதால் அவரது ஹெலிகாபடர் பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் கார் மூலம் வந்தவாசிக்கு கிளம்பிச் சென்றார்.
இன்று இரவு காஞ்சிபுரத்தில் தங்கும் அவர் நாளை காலை அதிமுக தேர்தல் பணிக் குழுவுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். பின்னர் பிரச்சாரத்தில் ஈடுபடும் ஜெயலலிதா, மேல்மருத்தூர் வழியாக நாளை இரவு சென்னை திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்-ஜெ:
முன்னதாக திருச்செந்தூர் பிரச்சாரத்தை முடித்துவிட்டு நேற்று சென்னை திரும்பிய ஜெயலலிதா விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,
திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தல்களில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆனால் ஆளும்கட்சியினர் பல இடங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றனர். இதற்கு அதிகாரிகளும், போலீசாரும் துணை போகின்றனர். அதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது. இதையும் மீறி நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார்.
நயினார் ஹோட்டலில் ரெய்ட்:
இந் நிலையில் நெல்லையில் முன்னாள் அதிமுக அமைச்சர் நயினார் நாகேந்திரன் ஹோட்டலில் போலீசார் சோதனை நடத்தி ரூ. 32 லட்சத்தை கைப்பற்றப்பற்றினர்.
திருச்செந்தூர் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இந்த பணத்தை அவர் பதுக்கி வைத்திருந்தாரா என்று விசாரணை நடந்து வருகிறது.
ஜெயலலிதா கொடும்பாவி எரிப்பு:
இதற்கிடையே திருச்செந்தூரில் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா ஜாதி உணர்வை தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இன்று ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரித்தனர். போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
ஸ்டாலின்-விஜயகாந்த் பிரச்சாரம்:
இந் நிலையில் வந்தவாசியில் துணை முதலவர் மு.க.ஸ்டாலின், திமுக வேட்பாளர் கமலக்கண்ணனை ஆதரித்தும்,
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேட்பாளர் ஜனார்த்தனனை ஆதரித்தும் இன்று வந்தவாசியில் பிரச்சாரத்தை துவக்கிறனர்.