கோத்தபயா அப்படி சொல்லவி்ல்லை-பொன்சேகா பல்டி
எதையாவது ஒன்றைக் கூறி விட்டு, பின்னர் அப்படிக் கூறவே இல்லையே என்று மறுப்பது தமிழக அரசியல்வாதிகளின் ஸ்டைல். இந்த ஸ்டைலை இப்போது பொன்சேகாவும் காப்பி அடித்து விட்டது போலத் தெரிகிறது.
சரணடைய வெள்ளைக் கொடிகளுடன் வரும் விடுதலைப் புலிகள் இயக்க நிர்வாகிகளை பாரபட்சம் பார்க்காமல் சுட்டுக் கொல்லுமாறு ராணுவத் தளபதிக்கு கோத்தபயா ராஜபக்சே உத்தரவிட்டதாக பகீர் தகவலை வெளியிட்ட அடுத்த நாளே நான் அப்படிக் கூறவில்லையே என்று மறுத்துள்ளார் பொன்சேகா.
சண்டே லீடர் ஆங்கில நாளிதழ்தான் பொன்சேகாவின் இந்த பரபரப்புப் பேட்டியை பிரசுரித்தது. இதையடுத்து சிங்களர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ராணுவ தலைமைத் தளபதி ஜெயசூர்யா, ராணுவத்தின் வெற்றியைக் காட்டிக் கொடுத்து விட்டார் பொன்சேகா என்று பாய்ந்துள்ளார். இலங்கை அரசும் பொன்சேகா மீது அரசு ரகசியத்தை வெளியிட்டு விட்டதாக கூறி நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறது.
இந்த நிலையில் தான் சொன்ன கருத்திலிருந்து பல்டி அடித்துள்ளார் பொன்சேகா.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
நான் அளித்த பேட்டியின்போது தெரிவித்த கருத்துக்களை சம்பந்தப்பட்ட பத்திரிக்கை திரித்துக் கூறியிருக்கிறது.
நார்வே மூலமாக கோத்தபயா மற்றும் பசில் ஆகியோருக்கு அறிவித்து, அதன் பின்னர் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் வெள்ளைக் கொடியுடன் சரணடைய முற்பட்டவர்கள் குறித்து, கோத்தபாயவும், பசிலும் என்ன செய்தார்கள் என என்னிடம் கேட்கப்பட்டது.
இதுதொடர்பாக எனக்குத் தெரியாது, பின்னர் ஊடகங்களில் வந்த செய்திகள் மூலம்தான் இவை எனக்குத் தெரிய வந்தது என்று நான் பதிலளித்தேன்.
மேலும், உயர் ராணுவத் தளபதி ஒருவருக்கு வெள்ளைக் கொடியுடனோ அல்லது கொடி இன்றியோ வரும் புலி உறுப்பினர்களை தப்பிக்க விட வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சகம் (கோத்தபயாதான் பாதுகாப்பு அமைச்சக செயலாளர்) அறிவுறுத்தியிருப்பதாக ஊடகங்களின் மூலம் நான் அறிந்து கொண்டேன் என்று மட்டுமே பேட்டியில் நான் கூறியிருந்தேன். ஆனால் அதை அந்த பத்திரிக்கை திரித்துக் கூறி விட்டது என்று கூறியுள்ளார் பொன்சேகா.