மேம்பாலத்தின் கூரை மீது ஏறி இறங்க முடியாமல் தவித்த கூர்க்காவால் பரபரப்பு
சென்னை: சென்னையில் நடைபாதை மேம்பால கூரை மீது விளையாட்டுத்தனமாக ஏறிய கூர்க்கா, அதிலிருந்து இறங்க முடியாமல் தவித்தார். உதவி கோரி அவர் கோஷமிட்டதை தற்கொலை செய்யப் போவதாக கூறுவதாக கருதி மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் மாநகராட்சி சார்பில் சாலையை கடக்கும் பாதசாரிகள் வசதிக்காக நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு தற்போது லிப்ட் அமைக்கப்பட்டு வந்தது. இந்தப் பணிக்காக அருகில் சாரம் போட்டு கூரை வரை அமைத்திருந்தனர்.
இன்று காலை இந்த சாரம் வழியாக ஒரு இளைஞர் மேலே ஏறினார். அரைகுறை தமிழிலும் இந்தியிலும் அவர் பேசி கீழே குதித்துத் தற்கொலை செய்யப் போவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் கிட்டத்தட்ட அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் அந்த நபரைப் பிடித்து கீழே கொண்டு வந்தனர்.
அவரிடம் விசாரித்தபோது அவர் ஒரு கூர்க்கா என்பது தெரிய வந்தது. அவர் உண்மையில் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை, தற்கொலை செய்யப் போவதாக மிரட்டவும் இல்லை. மேலே ஏறி விட்டேன், கீழே இறங்க முடியாமல் தத்தளிக்கிறேன், உதவி செய்யுங்கள் என்பதைத்தான் அரை குறை தமிழில் அவர் கூறியுள்ளார். அவர் தற்கொலை செய்யப் போவதாக மிரட்டுவதாக நினைத்து அனைவரும் கூடி விட்டனர்.
இதைக் கேட்ட போலீஸார் அந்த நபரை இதுபோல சாரத்தில் ஏறி விளையாடுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications