பிளவை நோக்கி தெலுங்கு தேசம்-நாயுடு புது திட்டம்!
ஹைதராபாத்: தெலுங்கானா விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சி பிளவை நோக்கி சென்று கொண்டுள்ளது. இதைத் தவிர்க்க கட்சியில் தெலுங்கானாவுக்கென ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்தி நிர்வாகிகளை நியமி்க்க அக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார்.
தெலுங்கானா விவகாரத்தால் ஆந்திராவில் தெலுங்கான ராஷ்டிரீய சமிதி தவிர மற்ற முக்கிய கட்சிகள் அனைத்திலும் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
தெலுங்கான பகுதி கட்சியினர் அதை ஆதரிப்பதாலும், ராயலசீமா- கடலோர ஆந்திர பகுதியினர் அதை எதிர்ப்பதாலும் கட்சிகளில் பெரும் மோதல் வெடித்துள்ளது.
குறிப்பாக சந்திரபாபு நாயுடுவி்ன் தெலுங்கு தேசம் கட்சியில் தான் மோதல் அதிகமாகியுள்ளது. தெலுங்கானா விஷயத்தில் ஆதரிப்பதாகவும் எதிர்ப்பதாகவும் சமயத்துக்கு தக்கவாறு பல வேடம் போட்டவர் நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது அவர் தெலுங்கானாவை எதிர்ப்பதாகக் கூறுவதால் அப் பகுதியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்பி்க்கள், கட்சி நிர்வாகிகள் நாயுடு மீது கடுப்பாகியுள்ளனர். அவர்கள் ஒன்று கூடி ஆலோசிக்க ஆரம்பித்துள்ளனர்.
தெலுங்கு தேசம் கட்சியில் தெலுங்கானா பகுதிக்கு என்று தனிக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையறிந்ததும் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள், எம்பிக்கள், கட்சி நிர்வாகிகள் தனியாக கூட்டம் நடத்தினர்.
இந்தப் பிளவு காரணமாக தெலுங்கு தேசம் கட்சியே இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதைத் தவி்ர்க்க சந்திரபாபு நாயுடு பெரும் முயற்சிகள் எடுத்து வருகிறார். சட்டசபை தெலுங்கு தேசம் கட்சித் துணைத் தலைவர்களான ஜனார்த்தன் ரெட்டி, நரசிம்லு இருவருமே தெலுங்கானா தெலுங்கு தேசம் எம்எல்ஏக்களுக்கு தலைமை ஏற்று போர்க் கொடி உயர்த்தியுள்ளதால் நாயுடு பீதியில் உள்ளார்.
இதனால் தெலுங்கு தேசத்தை ஆந்திரா, தெலுங்கா பகுதிகள் என இரு பிரிவாகப் பிரித்து தனித்தனியே நிர்வாகிகளை நியமிக்க அவர் முடிவு செய்துள்ளார்.
மத்திய அரசு தான் பொறுப்பு-நாயுடு:
இந் நிலையில் தெலுங்கானா அறிவிப்பால் ஆந்திராவில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என நாயுடு கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், பிரச்சனையை மத்திய அரசு சிக்கலாக்கிவிட்டது. தெலுங்கானா என்ற தீப்பொறியை பற்ற வைத்தது மத்திய அரசு தான். இப்போகு கொழுந்துவிட்டு எரியும் இந்தப் பிரச்சனையை அணைக்க வேண்டியதும் மத்திய அரசின் பொறுப்பு தான்.
கொஞ்சம் கூட யோசிக்காமல் ப.சிதம்பரமும் மொய்லியும் அவசர அறிவிப்புகளை வெளியிட்டு பிரச்சனையை குழப்பிவிட்டனர் என்றார்.
நாடாளுமன்றம் ஒத்திவைப்பு:
இந் நிலையில் தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அவர்கள் இருக்கையில் இருந்து எழுந்து சபாநாயகர் அருகே வந்து கோஷமிட்டப்படி இருந்ததால் சபாநாயகர் மீராகுமார் பகல் வரை சபையை ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications