ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்த 2 தலைவர்கள் - அமைச்சர் பதவி பரிசு
கொழும்பு: ஐக்கிய தேசியக் கட்சி சரத் பொன்சேகாவை ஆதரிக்க முடிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியிலிருந்து விலகி ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் சேர்ந்த இருவருக்கு உடனடியாக அமைச்சர் பதவி கொடுத்து பரிசளித்துள்ளார் ராஜபக்சே.
ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைவர்கள் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இந்திகா பண்டாரநாயகே. இவர்கள் இருவரும் பொன்சேகாவுக்கு ஆதரவு அளிக்க தங்களது கட்சி முடிவு செய்ததற்கு அதிருப் தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகினர்.
மேலும் ராஜபக்சேவை சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து அவர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கி பரிசளித்துள்ளார் ராஜபக்சே.
பெர்னாண்டோ நில வளர்ச்சி, படை வீரர் நலத்துறை அமைச்சராகவும், பண்டாரநாயகே இயற்கை வளத்துறை துணை அமைச்சராகவும் ஆக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பெர்னாண்டோ, ஐக்கிய தேசியக் கட்சி முக்கிய எதிர்க்கட்சியாகும். ஆனால் அந்தக் கட்சியைச் சேர்ந்த யாரும் அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக சர்ச்சைக்குரிய பொன்சேகாவை ஆதரிக்க முடிவு செய்தனர்.
ரணில் விக்கிரமசிங்கே கட்சியை அழிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். பழிவாங்கும் அரசியலை அவர் மேற்கொண்டு வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துத்தான் கட்சியிலிருந்து விலகினோம் என்றார்.