அடுத்த மாதம் முதல் 9 மணிக்கே பங்குச் சந்தை திறப்பு
பங்குச் சந்தையின் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என சிலரும், அதிகரிக்கக் கூடாது என்று சிலரும் கோரி்க்கை விடுத்துள்ளனர். இதுபற்றி ஒரு சர்வேயும் எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் பங்குச் சந்தையின் வழக்கமான நேரமான காலை 9.55 முதல் மாலை 3.30 என்பதை, இனி காலை 9.44 - மாலை 3.30 என மாற்றுவதாக செபி நேற்று அறிவித்தது.
ஆனால் இந்த அறிவிப்பு எந்த விளைவையும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை. 10 நிமிடம் அதிகரிப்பதால் பலன் ஒன்றும் இருக்காது என்று பங்குத் தரகர்கள் தெரிவித்துவிட்டனர். இந்த நிலையில் தேசிய பங்குச் சந்தை என்எஸ்இ, தனது வர்த்தக நேரத்தை காலை 9 மணிக்கு துவங்குமாறு மாற்றியது.
இதனால் மும்பை சந்தையை விட 55 நிமிடம் முன்கூட்டியே என்எஸ்இ துவங்கும் நிலை.
இதன்படி இனி காலை 9 மணிக்கே தேசிய பங்குச் சநதையிலும், மும்பை பங்குச் சந்தையிலும் வர்த்தகம் துவங்கிவிடும். மாலை 3.30 மணிக்கு முடியும்.
இந்த நேரமாற்றத்தை நாளை (வெள்ளிக்கிழமை) முதலே அமல்படுத்த உள்ளதாக செபி அறிவித்திருந்தது. ஆனால் இதை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்து செபி தற்போது உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, 2010ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி முதல் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை காலை 9 மணிக்கு பணிகளை துவக்கும்.
ஆசியாவின் இதர பங்குச் சந்தை நேரத்துக்கு ஏற்ப இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செபி அறிவித்துள்ளது.