ஸ்கூட்டர் உற்பத்தி நிறுத்தம்; புண்பட்ட ராகுல் பஜாஜ்.. புதுவிளக்கம் சொல்லும் ராஜீவ் பஜாஜ்!
ரூ 8500 கோடி மதிப்புள்ள பஜாஜ் குழுமம் ஸ்கூட்டர் உற்பத்திக்குப் பெயர் பெற்றது. ஸ்கூட்டர் உற்பத்திதான் இந்த நிறுவனத்தின் அடிப்படையாக இருந்துவந்தது. அதில் வலுவாக காலூன்றியதால்தான் இன்று கார் உற்பத்தி வரை வளர்ந்துள்ளது இந்த நிறுவனம்.
ஆனாலும் வட இந்தியர்கள் மட்டுமே இன்றைக்கு கியர் ஸ்கூட்டர்களை பயன்படுத்துகிறார்கள். தென் இந்தியாவில் ஸ்கூட்டர்களுக்கு பெரிய சந்தை கிடையாது. மொபட், பைக்தான் அவர்களின் விருப்ப வாகனம். அதனால்தான் எல்எம்எல்காரர்கள், முழுவதுகாக ஸ்கூட்டர்களையே நிறுத்தி விட்டார்கள்.
இன்று டெல்லி போன்ற நகரங்களிலும்கூட பைக்குக்கு மாறி விட்டார்கள் மக்கள். இதனால் கிறிஸ்டல் என்ற கியர் இல்லாத ஸ்கூட்டர் தவிர மற்றவற்றின் உற்பத்தியை நிறுத்தி விட்டது பஜாஜ்.
நடைமுறை நிஜத்தை உணர்ந்த பஜாஜ் குழுமத்தின் நிர்வாக இயக்குநரும், குழும தலைவர் ராகுல் பஜாஜின் மகனுமான ராஜீவ் பஜாஜ், இப்போது ஸ்கூட்டர் தயாரிப்பையே அடியோடு நிறுத்திவிடுவதாக அறிவித்துள்ளார். இது அவரது தந்தை ராகுல் பஜாஜை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
சமீபத்தில் இதுகுறித்து செய்திச் சேனல்களுக்கு பேட்டியளித்த ராகுல் பஜாஜ், "என் மகன் இதை அறிவித்திருக்கக் கூடாது. இது தவறான முடிவு. ஸ்கூட்டரை நிறுத்துவது தொடர்பாக அவர் எனக்கு விளக்கிச் சொல்ல முற்பட்டாலும், நான் இன்னும் சமாதானமடையவில்லை..." என்றார்.
இதுபற்றி கருத்து கூறிய ராஜீவ், "அப்பாவின் சென்டிமெண்ட்டுக்கு இங்கு இடமில்லை. இது பிஸினஸ். லாஜிக்காக யோசிக்க வேண்டும். லாஜிக் மூலம் மேஜிக் நிகழ்த்த வேண்டும். இதுதான் என் அறிவிப்பின் பின்னணி. இந்த ஸ்கூட்டர் வர்த்தகத்தை லாபகரமாக மாற்றுவது எப்படி என்று முதலில் யோசிக்க வேண்டும். புதுமாதிரி ஸ்கூட்டர்களுடன் மீண்டும் மார்க்கெட்டைக் கலக்கலாம். அதுவரை, மக்களுக்குப் பிடித்தமான, அதிகம் விற்பனையாகும் பைக்குகளைத் தயாரிப்பதுதான் லாபகரமானது" என்று கூறியுள்ளார்