டெல்லியில் பிரதமர் விருந்து- எதிரெதிர் துருவங்கள் பங்கேற்பு
டெல்லி: அரசியல்வாதிகள் ஏற்பாடு செய்யும் விருந்துகளுக்கு காரணம் இல்லாமல் போகலாம். ஆனால், நேரடியாகவும், பகிரங்கமாகவும் சொல்லமுடியாத பல தகவல்களை சமிஞ்சைகளாக, நாசூக்காக வெளிப்படுத்துவதற்கு இதுபோன்ற விருந்துகள் பலபேருக்கு பல சந்தர்ப்பங்களில் பயன்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தனது பங்களாவில் நேற்று இரவு ஒரு விருந்தை ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில் காணப்பட்ட காட்சிகள் இதைத் தான் நினைவுபடுத்துகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் இரண்டுமே நடு பந்தியில் ஒய்யாரமாக வலம் வந்தனர். சமாஜ்வாதி தலைவர் முலாயம், தன் மகன் அகிலேஷ் யாதவ் மற்றும் பொதுச் செயலாளர் அமர்சிங் சகிதம் விருந்தில் பங்கேற்றார்.
'மத்தில் ஆளும் காங்கிரஸ் தலையிலான கூட்டணி அரசோடு நீங்கள் மட்டும் தான் ஒட்டுறவாட முடியுமா என்ன? எவ்வளவு தான் பிணக்குகள் இருந்தாலும் காங்கிரசோடு நாங்கள் முழுசாக உறவை முறித்துக்கொள்ளவில்லை' என்பதை உணர்த்தும் வகையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைமை தனது கட்சியின் எம்.பி தாரா சிங்கை விருந்துக்கு அனுப்பி வைத்திருந்தது.
கடந்த முறை ஆட்சியின் போது மிகுந்த முக்கியத்துவத்துடன் உலா வந்த ஆர்.ஜே.டி தலைவர் லாலு விருந்துக்கு தாமதமாகவே வந்தார். ஆனால் முன்பை போல யாரும் அவருக்கு அதிக முக்கியத்துவம் தரவில்லை. பெரும்பாலும் அவர் தனியாகவே காணப்பட்டார்.
ரயில்வே துறை கைமாறியதைப் போல லாலுவுக்கு கிடைத்து வந்த முக்கியத்துவம் திரிணமூல் காங்கிரசின் மமதா பானர்ஜிக்கு இடம் பெயர்ந்துவிட்டது. விருந்தில் மமதா அண்ட கோ உற்சாகமாக காணப்பட்டனர்.
அதேபோல், தெலுங்கானா விவகாரத்தால் ஆந்திராவில் காங்கிரஸ் மத்தியில் பிளவு ஏற்படுவதாக செய்திகள் கிளம்பியுள்ள நேரத்தில் கூட்டணி அரசில் ஒருமித்த கருத்து உள்ளவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பேச இந்த விருந்து வாய்ப்பாக அமைந்தது. ஜகன்மோகன் ரெட்டி, டி.சுப்பிராமி ரெட்டி உள்ளிட்டோர் விருந்தில் பங்கேற்றனர்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் டேபிளில் ராகுல்காந்தி தான் கடைசி வரை கம்பெனியாக பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டிருந்தார். சோனியா-சிதம்பரம் தனி டேபிளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
தி.மு.க சார்பில் விருந்தில் கலந்துகொண்ட எம்.பி டி.ஆர்.பாலு பிரனாப் முகர்ஜிக்கு கம்பெனி கொடுத்துக் கொண்டிருந்தார். இவர்கள் தவிர மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ஃபரூக் அப்துல்லா உட்பட பலர் விருந்தில் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications