கோபன்ஹேகன்: அடுத்தடுத்து திருப்பம்- வெளிநடப்பு செய்து திரும்பி வந்த மன்மோகன் சிங்-சீனா பிரதமர்

கோபன்ஹேகன் மாநாடு பெரும் பரபரப்பாகியுள்ளது
கோபன்ஹேகன் மாநாட்டின் தீர்மானம் தொடர்பாக நேற்று இரவு இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளின் தலைவர்கள் கூடி தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டனர். இன்று காலை வரை இந்த ஆலோசனைக் கூட்டம் நீடித்தது.
அதன் பின்னர் இந்தத் தலைவர்களின் பிரதிநிதிகள், மாநாட்டுத் தலைவரும் டென்மார்க் பிரதமருமான ரஸ்முஸனை சந்தித்தனர். அதன் பின்னர் மாநாட்டுத் தீர்மானம் தயாராகி விட்டதாகவும், விரைவில் இதை டென்மார்க் சமர்ப்பிக்கும் என்றும் அறிவிப்பு வெளியானது.
ஆனால் இதற்கு இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் கடும் ஆட்சேபனை தெரிவித்தன.
இந்தியா மற்றும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பான ஜி-77 ஆகியவை இந்த தீர்மானம் மிகப் பெரிய டிராமா என்று வர்ணித்துள்ளன.
கடும் கோபத்தை முகத்தில் காட்டியபடி மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் மிகப் பெரிய டிராமாவை அரங்கேற்றியுள்ளதாக கருதுகிறோம். அனைவருடனும் ஆலோசனை நடத்தினோம் என்று கணக்கு காட்டுவதற்காகவே இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்ததாக கருதுகிறோம்.
பேசிக் அமைப்பின் (இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா) கூட்டத்தைக் கூட்டியுள்ளோம். அதில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்போம்.
ஏற்கனவே டென்மார்க் சமர்ப்பித்த வரைவுத் தீர்மானத்தைத்தான் உரு மாற்றி புதிய தீர்மானமாக காட்டுகின்றனர். ஒரு மணி நேரத்தில் எப்படி இவ்வளவு பெரிய தீர்மானத்தை உருவாக்க முடியும். இது மிகப் பெரும் மர்மமாக உள்ளது.
யாரிடமிருந்தோ தீர்மானத்தைப் பெற்று புதிய தீர்மானமாக காட்ட முயல்வதாக கருதுகிறோம் என்றார்.
ஜி-77 அமைப்பின் இணைத் தலைவரான லுமும்பா ஸ்டானிஸ்லாஸ் டி அபிங் கூறுகையில், இது பெரிய நாடகம். டென்மார்க் கொடுத்த வரைவுத் தீர்மானத்தை அப்படியே மாற்றிக் காட்டுகின்றனர். திட்டமிட்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றி ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்றார்.
'பேசிக்' கூட்டம்...
இந்த நிலையில் இன்று பேசிக் எனப்படும் இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு தீர்மானம் குறித்து விவாதித்தது.
முன்னதாக இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கும், சீன பிரதமர் வென் ஜியாபோவும் சந்தித்து இதுகுறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில், தீர்மானத்தின் அம்சங்கள் வளரும் நாடுகளுக்கு சாதகமாக இல்லை என்ற கருத்தொற்றுமை எட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற இரு தலைவர்களும், மாநாட்டிலிருந்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்து வெளியேறினர்.
இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா, சீனா தவிர, பேசிக் அமைப்பில் இடம் பெற்றுள்ள பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகியவையும் வெளிநடப்பு செய்தன.
பின்னர் இந்த நான்கு நாடுகளின் தலைவர்களும் தனியாக கூடி ஆலோசித்தனர். இதனால் மேலும் பரபரப்பு கூடியது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் நான்கு நாடுகளின் தலைவர்களும் மீண்டும் கூட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்து அரங்குக்குத் திரும்பினர்.
எதில் சிக்கல்...?:
புகை மாசுக் கட்டுப்பாட்டு குறித்துதான் இந்தியா, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த விவகாரத்தில் இந்தியாவும், சீனாவும் மட்டுமல்லாமல் அமெரிக்காவும் பிடிவாதத்துடன் காணப்படுவதாக சுவிட்சர்லாந்து சுற்றுச்சூழல் அமைச்சர் ஆன்ட்ரியாஸ் கார்ல்கிரென் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 110 உலகத் தலைவர்களின் மாநாடு தொடங்குவதற்கு முன்பாக தீர்மானத்தை இறுதி செய்ய தீர்மானித்தோம். ஆனால் முடியவி்ல்லை.
தற்போது உலகத் தலைவர்கள்தான் இதுகுறித்து தீர்மானிக்க வேண்டும். சீனாவும், அமெரிக்காவும்தான் இழுபறிக்கு முக்கியக் காரணம் என்றார் அவர்.
சென்னை மேயர் சைக்கிளில் ரவுண்டு...
இதற்கிடையே கோபன்ஹேகன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றுள்ள சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்ரமணியன், சைக்கிளில் நகரை வலம் வந்தார்.
கோபன்ஹேகன் மாநாட்டில் கலந்து கொள்ள, சென்னை மற்றும் டெல்லி மேயர்களுக்கு அழைப்பு வந்தது. அதில் சென்னை மேயர் மா.சுப்ரமணியன் மட்டும் கலந்து கொண்டார்.
கடல்நீரை குடிநீராக மாற்றி பயன்படுத்துதல், கழிவுநீரை எரிவாயுவாக மாற்றி அந்நாட்டு மக்கள் பயன்படுத்துவது ஆகியவற்றை மேயர் நேரில் பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications