முல்லைப் பெரியாறு-வைகோ இன்று நடை பயணம்
மதுரை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மதுரை மாவட்டத்தில் நடை பயணத்தைத் தொடங்குகிறார்.
இன்று மாலை மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கருமாத்தூரில் மாலை 3 மணிக்கு வைகோவின் நடைபயணம் தொடங்குகிறது.
அங்கிருந்து கிளம்பி இரவு 9 மணிக்கு வாடிப்பட்டி ஒன்றியம் வாடிப்பட்டியில் பேரூரில் இன்றைய பயணத்தை முடிக்கிறார் வைகோ.
பின்னர் 20-ந் தேதி மாலை 3 மணிக்கு மதுரை சமயநல்லூரில் இருந்து பிரசாரத்தை தொடங்கி, இரவு 8.30 மணிக்கு அலங்காநல்லூர் ஒன்றியம் குலமங்கலத்தில் முடிக்கிறார்.
21-ந் தேதி மதுரை சர்வேயர் காலனியில் இருந்து மாலை 3 மணிக்கு பிரசாரத்தை தொடங்கி, இரவு 9.20 மணிக்கு சுந்தராஜன்பட்டியில் முடிக்கிறார் என்று மதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
'கலகம் பிறந்தால் தான் நியாயம் கிடைக்கும்'
முன்னதாக இன்று காலை தேனி வந்த வைகோ நிருபர்களிடம் பேசுகையில்,
முல்லை பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படுத்த, புதிய அணை கட்டுவற்கு கேரளா அரசு முடிவு செய்து விட்டது. அணை கட்டுவதற்கு தேவையான பொருட்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. அதற்கான அலுவலகமும் திறக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அனுமதி கொடுக்காவிட்டாலும் புதிய அணை கட்டியே தீருவோம் என்று தீர்மானமாக உள்ளனர். தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதில்லை என்ற நிலைபாட்டிற்கு கேரள வந்துள்ளது.
முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டி தமிழகத்திற்கு தீங்கு ஏற்படுத்தினால் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை கேரளா யோசிக்க வேண்டும். இன்றைக்கு நான் அமைதி வழியில் போகிறேன். வன்முறையில் ஈடுபட்டதில்லை. ஈடுபடப்போவதும் இல்லை.
தமிழர்களின் வாழ்வாதாரம் அழிந்து விடும் நிலை வரும் போது மக்களுக்கு பயமும், ஆத்திரமும் ஏற்படும். அதனால் கேரளாவிற்கு எந்த பொருட்களும் செல்லாது. ஆயிரம் தெலுங்கானாக்கள் உருவாகும்.
புதிய அணை கட்டுவதை உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் தடுக்க முடியாது என்ற தைரியத்தில் கேரள அரசு உள்ளது. எனவே, கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும்' என்றார்.