நீதிபதி தினகரனுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் மாயாவதி
நீதிபதி பி.டி.தினகரன் நில ஆக்கிரமிப்பு, முறைகேடுகள் உள்ளிட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவருக்கு எதிராக ராஜ்யசபாவில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர எம்.பிக்கள் அணி திரண்டு வருகின்றனர். இதுதொடர்பான நோட்டீஸும் ராஜ்யசபா தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 75 எம்.பிக்கள் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த நிலையில் தினகரன் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக சிலர் செயல்படுவதாக கூறி தினகரனுக்கு ஆதரவுகள் எழ ஆரம்பித்துள்ளன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில எம்.பிக்கள் தினகரனுக்கு ஆதரவாக ராஜ்யசபாவில் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் உ.பி. முதல்வர் மாயாவதியும், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்,
கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து தனது தரப்பு நியாயத்தை விளக்க தினகரனுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.
தற்போது நடந்து வரும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது கவலை ஏற்படுகிறது. பிரச்சினையின் முக்கியத்துவத்தை யாரும் உணர்ந்தது போலத் தெரியவில்லை. தனது தரப்பு நியாயத்தை விளக்கும் வாய்ப்பு நீதிபதி தினகரனுக்கு அளிக்கப்படவே இல்லை.
அப்படி வாய்பளிக்கப்படாவிட்டால் அது இயற்கை நீதிக்குப் புறம்பானதாக அமைந்து விடும் என்று கூறியுள்ளார் மாயாவதி.
தினகரன் விவகாரத்தில் மாயாவதி தலையிட்டிருப்பதால் இந்த விவகாரம் புதிய கோணத்தை எட்டியுள்ளது.