நான் தான் கிடைச்சனா உங்களுக்கு.. தங்கத்துக்கு தாறுமாறு கண்டிஷன்! சரியப் போகும் விற்பனை..WGC வார்னிங்
சென்னை: இந்தியாவில் தங்க இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், 2026 ஆம் ஆண்டில் தங்க நகை மற்றும் முதலீட்டு தேவைகள் சுமார் 10 சதவீதம் வரை குறையக்கூடும் என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த தகவல் தற்போது நகை வியாபாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டில் 7 சதவீதத்துக்கும் அதிகமாக சரிந்துள்ள நிலையில், வெளிநாட்டு நாணய கையிருப்பை பாதுகாக்கவும், தங்க இறக்குமதியை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதன் ஒரு பகுதியாகவே கடந்த மே 13 ஆம் தேதி தங்க இறக்குமதி வரி திடீரென 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இது இந்திய வரலாற்றிலேயே தங்க இறக்குமதி வரியில் செய்யப்பட்ட மிகப்பெரிய உயர்வாக பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலையில் குறைக்கப்பட்ட வரியை மீண்டும் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தியாவில் தங்க இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், 2026 ஆம் ஆண்டில் தங்க நகை மற்றும் முதலீட்டு தேவைகள் சுமார் 10 சதவீதம் வரை குறையக்கூடும் என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. உலக தங்க கவுன்சிலின் அறிக்கையின்படி, வரி உயர்வு அறிவிக்கப்பட்ட பிறகும் இந்திய சந்தையில் தங்க விலை அதற்கேற்ற அளவுக்கு அதிகரிக்கவில்லை. இதற்கு காரணம், தற்போது தங்கத்திற்கு உள்ள குறைந்த அளவிலான தேவை மற்றும் சந்தையில் போதுமான அளவில் கையிருப்பு இருப்பதுதான் என்று கூறப்பட்டுள்ளது.
தங்க இறக்குமதி வரி
வரி உயர்வுக்கு முன்பு அதிகாரப்பூர்வ இறக்குமதி விலையை விட ஒரு அவுன்ஸுக்கு சராசரியாக 14 டாலர் மட்டுமே தள்ளுபடி இருந்த நிலையில், தற்போது அது சுமார் 150 டாலர் வரை உயர்ந்துள்ளது. பழைய குறைந்த வரி விகிதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தை வியாபாரிகள் சந்தைக்கு வெளியிட்டதும், முதலீட்டாளர்கள் லாபம் எடுத்து வெளியேறியதும் இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.
பங்கு சந்தை
இந்த அறிவிப்புக்குப் பிறகு பங்குச் சந்தையிலும் அதிர்வு ஏற்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட நகை நிறுவனங்களின் பங்கு விலை 2 சதவீதம் முதல் 17 சதவீதம் வரை சரிந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. மக்கள் தேவையற்ற செலவுகளை குறைக்க ஆரம்பிப்பார்கள் என்ற அச்சமே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், திருமண நகை தேவைகள் மற்றும் ஏற்கனவே சேமித்து வைத்திருந்த கையிருப்புகள் காரணமாக பெரிய நகை நிறுவனங்களுக்கு உடனடி பாதிப்பு அதிகமாக இருக்காது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலக தங்க கவுன்சில்
ஆனால் நடுத்தர மற்றும் சிறிய அளவிலான நகைக் கடைகள் சிக்கலை சந்திக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பழைய நகை மாற்று திட்டங்கள் மற்றும் குறைந்த அளவிலான கையிருப்பு முறைகளையே அவர்கள் அதிகமாக நம்ப வேண்டிய நிலை உருவாகும் என கூறப்படுகிறது. மேலும், தங்க இறக்குமதி வரி உயர்ந்தால் கடத்தல் தங்க வரத்து அதிகரிக்கும் அபாயமும் இருப்பதாக உலக தங்க கவுன்சில் சுட்டிக்காட்டியுள்ளது.
தங்க இறக்குமதி
கடந்த 2013 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வரி உயர்த்தப்பட்டபோது சட்டவிரோத தங்க இறக்குமதி அதிகரித்ததாகவும், பின்னர் வரி குறைக்கப்பட்டபோது கடத்தல் குறைந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரி உயர்வுகள் இருந்தபோதிலும், அதிகாரப்பூர்வ தங்க இறக்குமதி இன்னும் முழுமையாக குறையவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. 2026 ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியாவின் தங்க இறக்குமதி 5.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
எச்சரிக்கை
அக்ஷய திருதியை பண்டிகைக்கு முன்பாக நகை தயாரிப்பு நிறுவனங்கள் அதிக அளவில் தங்கத்தை வாங்கியதுதான் இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. இதற்கிடையே, 2026 ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்க நகை மற்றும் தங்க நாணய முதலீட்டு தேவை 50 முதல் 60 டன் வரை குறையலாம் என்றும், இது வருடாந்திர அடிப்படையில் சுமார் 10 சதவீத சரிவாக இருக்கும் என்றும் உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது.
தங்க முதலீடு
இந்தியாவில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல; சேமிப்பு மற்றும் பாதுகாப்பான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக திருமணம், விழாக்கள் மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளில் தங்கத்தின் தேவை தொடர்ந்து இருக்கும். இருந்தாலும் அதிக விலை மற்றும் அதிக வரி காரணமாக, வரும் மாதங்களில் மக்கள் தங்க வாங்குவதில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.














Click it and Unblock the Notifications