திருச்சி அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி உயிரிழப்பு.. தவறான சிகிச்சை காரணமா? ஆராய குழு அமைப்பு
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் மருந்துவரின் தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்த முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதையடுத்து மாணவி தவறான சிகிச்சையில் தான் உயிரிழந்தாரா என்பதை கண்டறிய, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர் பாஸ்கர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் நர்சிங் மாணவி உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தவறான சிகிச்சையே மரணத்திற்கு காரணம் என உறவினர்களும் சக மாணவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவி சீதாலட்சுமிக்கு, சில நாட்களுக்கு முன் காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு ஏற்பட்டது. தான் பயின்று வந்த அதே மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையிலேயே அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதாலட்சுமிக்கு, மூக்கில் சதை வளர்ந்திருந்ததால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீரென, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சீதாலட்சுமியின் மரணத்திற்கு தவறான ஊசி செலுத்தப்பட்டதே காரணம் என சக செவிலிய மாணவிகளும், பெற்றோரும் குற்றம் சாட்டி போராட்டம் நடத்தினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சம்பவம் குறித்து விசாரிக்க சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய வல்லுநர் குழுவை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.












Click it and Unblock the Notifications