கசாப்புக்குத் தண்டனை தர அவசரம் காட்டத் தேவையில்லை - தரூர்
டெல்லி: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் சிக்கி கைதாகியுள்ள அஜ்மல் கசாப்புக்குத் தூக்குத் தண்டனை தருவதற்கு அவசரம் இல்லை. நம்மிடம் சிக்கியுள்ள ஒரே சாட்சி அவன்தான். அவனிடமிருந்து நிறைய தகவல்களைப் பெற வேண்டியுள்ளது. அதை விட முக்கியமாக ஜனநாயக நடைமுறைகளை நாம் கடைப்பிடித்தாக வேண்டும் என்று மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார்.
இதுகுறித்துத அவர் கூறுகையில், நம்மிடம் சிக்கியுள்ள ஒரே தீவிரவாதி கசாப் மட்டுமே. அவனிடமிருந்து நிறையத் தகவல்களைப் பெற வேண்டியுள்ளது. மேலும், ஜனநாயக முறைப்படியும், சட்டப்படியும் நாம் நடந்தாக வேண்டும். எனவே கசாப்புக்குத் தண்டனை தருவதற்கு நாம் அவசரம் காட்டத் தேவையில்லை என்றார் தரூர்.
மும்பைத் தாக்குதல் நடந்து ஒரு வருடமாகியும் இன்னும் வழக்கு இழுத்துக் கொண்டிருப்பது குறித்து ஹேமந்த் கர்கரேவின் மனைவி கவிதா கர்கரே அதிருப்தியும், வேதனையும் தெரிவித்துப் பேசியிருந்தது நினைவிருக்கலாம்.