தமிழ் பெண்களின் கற்பை சூறையாடுகிறது ராணுவம்- நேரில் பார்த்தவர் பரபரப்பு சாட்சி
இலங்கையில் போரின் போது உயிர் பிழைத்தவர்களுடன் முகாம்களின் அடைக்கப்பட்டவர் 25 வயதான வாணி குமார். இவர் லண்டன் மருத்துவ சேவை நிறுவனத்தைச் சேர்ந்தவர்.
4 மாதம் முகாமில் அடைபட்டிருந்த இவர் சமீபத்தில் அங்கிருந்து மீண்டு லண்டன் திரும்பியுள்ளார். முகாமில் தான் கண்ட காட்சிகளை அவர் லண்டன் மீடியாவுக்கு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் இருந்த முகாம் மிகவும் கவனமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசக் கூட அனுமதிக்கப்படவி்ல்லை. முள் வேலிகளுக்கு அருகில் கூட செல்லவிடமாட்டார்கள்.
நான் பார்த்தவரை பாலியல் தொந்தரவுகள் முகாமில் மிகப் பொதுவான ஒன்றாகவே இருந்தது. பார்வையாளர் பகுதிகளில் ஒரு முனையில் நாங்களும், மறுமுனையில் உறவினர்களும் இருப்பார்கள்.
பெண்கள் தங்கள் உறவினர்களை பார்ப்பதற்காக வெளியே வந்து காத்திருப்பார்கள். அப்போது அங்குள்ள ராணுவ அதிகாரிகள் வந்து பெண்களை தொட்டு பாலியல் சேஷ்டைகளைச் செய்வார்கள். அதைத் தான் என்னால் பார்க்க முடிந்தது.
பொதுவாக முகாம்களுக்குள் பெண்களால் எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச முடியாது. கல் போல இருப்பார்கள். அப்படியே எதிர்த்தாலும் அவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
பல சமயங்களில் ராணுவ அதிகாரிகள் பெண்களிடம் பலர் முன்னிலையிலேயே தவறாக நடப்பார்கள். பின்னர் அவர்களுக்கு சாப்பாடு மற்றும் பணம் ஆகியவற்றை அதிகாரிகள் கொடுப்பார்கள்.
பெண்கள் சாப்பாடு கேட்டால் முதலில் செக்ஸ் வேண்டும் என்று கூறி கற்பழிப்பார்கள். பின்னர்தான் சாப்பாடு தருவார்கள். அது மட்டுமல்ல, கைதிகளை பல மணிநேரம் வெயிலில் முட்டிபோட வைத்தும் கொடுமைப்படுத்துவார்கள்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் என சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்றவர்கள் பலரை அதற்கு பின்பு அங்கு காணவே இல்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்றும் தெரியவில்லை என்று கூறியுள்ளார் வாணி குமார்.