கங்கண சூரிய கிரகணம் - முழுத் தகவல்களுடன் கூடிய இணையதளம் தொடக்கம்
சென்னை: 108 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் தினத்தின்போது கங்கண சூரியகிரகணம் நிகழவுள்ளது. இதுகுறித்த தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக ஒரு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
சூரியகிரகணம் குறித்த உண்மைகளை விளக்குவதோடு அதுகுறித்து மக்கள் மத்தியில் நிலவும் மூட நம்பிக்கைகளை புரிய வைக்கும் வகையிலும் இந்த இணையதளத்தைத் தொடங்கியுள்ளது. ரெப்யூட் இன்போடெக் மற்றும் என்டர்பிரைசஸ் நிறுவனம். இந்த முயற்சிக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் உதவி செய்துள்ளது.
இந்த இணையதளத்தின் முகவரி - www.pongaleclipse.com - என்பதாகும்.
இந்த இணையதளத்தில் வருடாந்திர சூரிய கிரகணம், சந்திர கிரகணம் குறித்த முழுத் தகவல்களும், அவை எப்போதெல்லாம் வருகின்றன என்பது குறித்தும் விரிவாக விளக்கிச் சொல்லப்பட்டுள்ளதாக ரெப்யூட் நிறுவன நிர்வாக இயக்குநர் அகமது மீரான் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சூரிய கிரகணம், சந்திர கிரகணத்தின்போது வெளியில் செல்லக் கூடாது. சாப்பிடக் கூடாது, பிரசவம் நடக்கக் கூடாது என்ற மூட நம்பிக்கை நம்மிடையே உள்ளது. அது தவறு என்று மக்களை தெளிவுபடுத்தத்தான் இந்த இணையதளத்தைத் தொடங்கியுள்ளோம்.
இயற்கையின் அரிய, அற்புத நிகழ்வுகள்தான் இந்த கிரகணங்கள். அவற்றை சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பார்த்து அனுபவிக்க வேண்டும் என்று மக்களை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
கங்கண சூரிய கிரகணம் ...
இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதியன்று கங்கண சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இது 108 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்படுவதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழகத்தில் கன்னியாகுமரியில் இந்த கிரகணத்தை முழுமையாக பார்க்கலாம்.
சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
சூரிய கிரகணத்தில் பல வகை உண்டு. முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம் மற்றும் கங்கண சூரிய கிரகணம் என்பதாகும்.
ஒரு இடத்தில் தெரியும் சூரிய கிரகணம், மீண்டும் அதே இடத்தில் ஏற்படுவது என்பது 108 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படுமாம். அப்படிப்பட்ட கங்கண சூரிய கிரகணம் தற்போது 108 ஆண்டுகளுக்குப் பின்னர் கன்னியாகுமரியில் நிகழவுள்ளது.
சூரியனைச் சந்திரன் மறைக்கும்போது கிரகணம் தெரியும். அப்போது சூரியனின் மையப் பகுதி முழுவதும் மறைந்து, விளிம்பு பகுதிகள் மட்டும் தெரிவதே கங்கண சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இதை ஒளிவட்ட சூரிய கிரகணம் என்றும் கூறுவார்கள்.
முழுமையான கங்கண சூரிய கிரகணம் ஏற்படும் பகுதிகளில்,அழகிய தங்க நிற வளையம் போல், சூரியன் ஜொலிப்பதைக் காண முடியும். ஜனவரி 15ம் தேதி தோன்றும் சூரிய கிரகணத்தின்போது, தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய தென்மாவட்டங்களில் இந்த முழுமையான கங்கண சூரிய கிரகணத்தைக் காண முடியும்.
தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இதனைக் காணலாம். எனினும் முழுமையான வளையத்தைக் காண முடியாது. சென்னையில் 85 சதவீதம் சூரிய வளையத்தைக் காணலாம்.
முழுமையான கங்கண கிரகணத்தைக் கண்டு களிப்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான ஆய்வாளர்கள் கன்னியாகுமரி, ராமநாதபுரம் முதலான பகுதிகளில் குவிய உள்ளனர்.
மத்திய அரசின் தேசிய அறிவியல் தொழில்நுட்பத் துறை மற்றும் சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் ஜனவரி 14,15 மற்றும் 16 ஆகிய 3 தினங்கள் கன்னியாகுமரியில் சூரிய கிரகணம் குறித்த பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது.
கங்கண கிரகணத்தை நேரில் கண்டுகளிக்க இந்த பயிற்சி பட்டறையில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த 750 மாணவ, மாணவிகள், 250 ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.
மேலும் திருச்சி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் முதலான மாவட்டங்களிலும் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான சூரிய கிரகண பயிற்சி பட்டறைகள் நடைபெற உள்ளன.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கங்கண சூரிய கிரகணம் குறித்த விழிப்புணர்வு அறிவியல் கலைப் பயணம் நடைபெற உள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியிலும், கிராமங்களிலும் நடைபெறும் இந்தப் பிரசாரப் பயணத்தின்போது, சுமார் 1 லட்சம் சூரிய கிரகணக் கண்ணாடிகளை விநியோகிக்க அந்த அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் கிரகணத்தைப் பாதுகாப்பாக கண்டுகளிக்க முடியும்.
மேலும் அறிவியல் இயக்கம் சார்பில் ஜனவரி 15ம் தேதி ராமநாதபுரத்தில் கங்கண சூரிய கிரகணத்தை கண்டு களிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், நாடு முழுவதும் இருந்து அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பைச் சேர்ந்த சுமார் 1000 அறிவியல் ஆர்வலர்கள் பங்கேற்க உள்ளனர்.