மீண்டும் அரசியல் குழப்பம்-நேபாளம் செல்கிறார் எஸ்.எம்.கிருஷ்ணா
டெல்லி/காத்மாண்டு: நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் தொடர் போராட்டங்களால் மீண்டும் அரசியல் குழப்பங்கள் தலைதூக்கியுள்ளது. இந்நிலையில், சமரச முயற்சிகளுக்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வரும் ஜனவரி 15ம் தேதி நேபாளத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
நேபாளத்தில் கடந்த 2006ம் ஆண்டு அரசுக்கும் மாவோயிஸ்டுகளும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி மாவோயிஸ்ட் நக்ஸலைட்டுகளை ராணுவத்தில் சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதற்கு தடையாக இருந்ததால் பதவிநீக்கப்பட்ட ராணுவ தலைமை தளபதி கட்டாவாலை அதிபர் ராம் பரண் யாதவ் மீண்டும் பதவியில் நியமிக்க முடிவு செய்தார். இதைக் கண்டித்து மாவோயிஸ்டுகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மூன்றாவது நாளாக இன்று மாவோயிஸ்டுகள் நடத்திய போராட்டங்களால் பல இடங்களில் வன்முறை வெடித்தது. போக்குவரத்து ஸ்தம்பித்தது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது.
'ராணுவ தளபதி விவகாரத்தில் அதிபர் ராம் பரண் யாதவ் தான் எடுத்த முடிவுக்காக மன்னிப்பு கேட்கவேண்டும். மேலும் இதுபற்றி நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு, அவரின் அதிகாரங்கள் குறித்த தெளிவான வரையறைகளை தெரிவிக்க வேண்டும்.'
இதையே தங்களின் முக்கிய கோரிக்கையாக முன்வைக்கும் மாவோயிஸ்டுகள், இவை நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் போராட்டங்களை நடத்துவோம் என எச்சரித்துள்ளனர். இப்போது அமைதியான முறையில் ஒரு அடையாள போராட்டமாகத் தான் நாங்கள் நடத்திவருகிறோம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் ஏற்கனவே பல பகுதிகளை தங்களுடையதாக அறிவித்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை தேசிய ராணுவத்துடன் இணைத்து இணக்கமான ஒரு அரசியலமைப்பை உருவாக்கி அரசமைப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என கருதப்படுகிறது.
இதைவிடுத்து அவர்களை ஒடுக்க அரசு நினைத்தால், அது மிகப்பெரிய விபரீதங்களை ஏற்படுத்தும். மீண்டும் நேபாளத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு முன்னேற்றத்துக்கான பாதைகள் ஒட்டுமொத்தமாக முடக்கப்படும் என நேபாள மூத்த தலைவர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் நேபாளத்தில் மீண்டும் ரத்த ஆறு ஓடும் சூழல் ஏற்படாமல் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வரும் ஜனவரி 15ம் தேதி காத்மாண்டு புறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்விஷயத்தில் இந்தியா தாமதமாக விழித்துக்கொண்டிருப்பதாகவே சர்வதேச அரசியல் அரங்கில் கருதப்படுகிறது.
அடுத்தமாதம் நேபாளம் செல்ல இருக்கும் எஸ்.எம்.கிருஷ்ணா, பிரதமர் மாதவ்குமார், மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தா, நேபாள வெளியுறவு அமைச்சர் சுஜாதா கொய்ராலா மற்றும் நேபாளி காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.
2006ல் ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தம் மற்றும் 1010 மார்ச் மாதத்துக்கும் அரசியலமைப்பு சாசனத்தை வடிவமைப்பது ஆகிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இரு தரப்பினர் இடையேயும் சமரசத்தை உருவாக்கும் முயற்சிகளில் இந்தியா ஈடுபடும் என தெரிகிறது.