இலங்கை அதிபர் தேர்தல்-முஸ்லீம்கள் வாக்களிக்க ஆர்வம்
கொழும்பு: இடம் பெயர்ந்த தமிழர்கள் இலங்கை அதிபர் தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் காட்டாமல் உள்ள நிலையில் இடம் பெயர்ந்த முஸ்லீம் மக்கள் வாக்களிக்க ஆர்வமாக உள்ளனர்.
இதுகுறித்து இலங்கை தேர்தல் ஆணையர் கூறுகையில், மாணிக் பார்ம் நலன்புரி கிராமத்தில் உள்ள 20 ஆயிரம் இடம் பெயர்ந்த மக்கள் வாக்களிக்க தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
டிசம்பர் 24ம் தேதிக்குள் வாக்களிக்க விரும்புவோர் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றார்.
அதேசமயம், புத்தளத்தில் உள்ள இடம் பெயர்ந்த முஸ்லீம் மக்கள் உள்ள முகாம்களில் தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் காணப்படுகிறதாம்.
இதுகுறித்து இலங்கை மறுகுடியமர்த்தல் துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறுகையில், நலன்புரி கிராமங்களில் உள்ள வாக்காளர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ள கிராம சேவை அதிகாரிகள் உதவி வருகின்றனர்.
புத்தளம் முகாமில் இதுவரை 25 ஆயிரம் முஸ்லீம்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர் என்றார்.
ஆனால், சுதந்திர மற்றும் நியாயமான தேர்தலுக்கான பிரசாரம் என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு இடம் பெயர்ந்த மக்கள் மத்தியில் தேர்தலி்ல் வாக்களிக்க ஆர்வம் குறைவாக உள்ளது. அரசுத் தரப்பிலும் அவர்களை பட்டியலில் சேர்க்க முயற்சிகள் எடுக்கப்படவில்லை.
இதுவரை கிட்டத்தட்ட 7000 இடம் பெயர்ந்த மக்களே பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். 1 லட்சத்து 60 வாக்காளர்கள் இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ளனர். இவர்களில் யாழ்ப்பாணத்தில் 1600 பேரும், வவுனியாவில் 5000 பேரும் மட்டுமே பெயர்களைப் பதிவு செய்துள்ளனர் என்றார்.
ஈழத் தமிழர்கள் இந்த முறையும் அதிபர் தேர்தலைப் புறக்கணிக்கலாம் என்று நேற்று ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அதை உறுதி செய்வது போல இது உள்ளது குறிப்பிடத்தக்கது.