ஜார்கண்டில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லை- கூட்டணி ஆட்சிக்கு காங் முயற்சி
ராஞ்சி: ஜார்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் எந்த கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால், சிபுசோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் லாலுவின் ஆர்.ஜே.டி கட்சிகளின் உதவியோடு ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் 5 கட்டமாக நடந்தது. மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கும் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.
இதில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பிடித்து முன்னணியில் உள்ளது. பாஜக கூட்டணி 2வது இடத்திலும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 3வது இடத்திலும் உள்ளன.
இதனால், தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் இருப்பதால் இந்தகட்சி ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ்- ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகியவை ஓர் அணியாகவும் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் மற்றொரு அணியாகவும் போட்டியிட்டன.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தனித்துப் போட்டியிட்டது. லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகளோடு சேர்ந்து தனி அணியாக போட்டியிட்டது.
பாஜக 67 தொகுதிகளிலும் காங்கிரஸ் 61 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின.
இதில் காங்கிரஸ் கூட்டனி 24 இடங்களிலும், பாஜக கூட்டணி 18 தொகுதிகளிலும், ஜார்கண்ட் முக்தி மோர்சா 17 இடங்களிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி உட்பட மற்றவை 21 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
ஆட்சி அமைக்க குறைந்தது 41 இடங்கள் தேவை. என்ற நிலையில் அதிக இடங்களில் முன்னணி வகிக்கும் காங்கிரஸ், ஜார்க்கண்ட முக்தி மோர்ச்சாவின் ஆதரவுடன் ஆட்சியை அமைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஆதரவை பெறுவதற்காக அக்கட்சியின் தலைவர் சிபுசோரனிடம் பேச உள்ளதாக ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கேஷவ் ராவ் தெரிவித்துள்ளார்.
லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் காங்கிரசின் இயற்கையான தோழமைக் கட்சிகள் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய அமைச்சரும் சுபோத்காந்த் சகாய் கூறியுள்ளார்.
கோடா மனைவி வெற்றி:
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் மதுகோடாவின் மனைவி கீதா கோடா ஜகன்நாத்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சோனா ராமை விட 3,889 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.