இந்தோனேசியா-நியூசிலாந்து- பிலிப்பைன்சில் நிலநடுக்கம்
ஜகார்த்தா: சுமத்ரா தீவுகளுக்கு அப்பால் இந்தோனேசியாவின் மென்தாவாயில் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் சேதாரங்கள் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் ஏதும் இல்லை.
மேற்கு சுமத்ரா மாகாணத் தலைநகர் படாங்கில் இருந்து 113 கி.மீ தொலைவை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.9 என பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
பூகம்பத்தின் போது படாங் நகரில் இருந்த இந்தோனேசிய பூகம்பவியல் ஆய்வு மைய தலைவர் ஃபவுஸி, 'படாங் நகரில் உள்ள கட்டிடத்தின் ஆறாவது மாடியில் நான் இருந்தபோது பூமி குலுங்கியதை உணர்ந்தேன். சுனாமி ஏற்படும் வாய்ப்பு இல்லை. இது பெரியளவிலான பாதிப்பையும் ஏற்படுத்தாது என நினைக்கிறேன்' என்றார்.
நியூசிலாந்து, பிலிப்பைன்சிலும்...:
நியூஸிலாந்து தலைநகர் வெலிங்டனிலும் இன்று 4.3 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு உணரப்பட்ட நிலநடுக்கம் வெலிங்டனில் இருந்து வடக்கே 30 கி.மீ தொலைவை மையம் கொண்டிருந்தது. வெலிங்டன் மற்றும் கபிதி கடலோரப் பகுதிகளில் பரவலாக உணரப்பட்டது.
அதேபோல், பிலிப்பைன்ஸ்சின் லுசான் தீவில் செவ்வாய் கிழமை ஏற்பட்ட பூகம்பம் 5.4ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய தகவல் தெரிவித்துள்ளது.
இரு இடங்களிலும் பூகம்பத்தால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications