கேரளாவில் மதுபான விற்பனை 'கிர்ர்...'!
திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இம்மாதத்தில் மட்டும் மதுபான விற்பனை ரூ.450 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள மாநிலத்தில் பீர் மற்றும் இந்திய தயாரிப்பு மதுவகைகளை கேரள மாநில மதுபானக் கழகம் (கே.எஸ்.பி.சி) விற்பனை செய்து வருகிறது. கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக டிசம்பர் மாதத்தில் கேரளாவில் மது விற்பனை சூடுபிடிக்கும்.
ஆனால், இந்தாண்டு மது விற்பனை சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கே.எஸ்.பி.சி நிர்வாக இயக்குனர் சங்கர் ரெட்டி கூறுகையில்,
'கடந்த ஆண்டு டிசம்பரில் ரூ.415 கோடிக்கு மது விற்பனை நடந்தது. இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.450 கோடியை தாண்டி விற்பனையாகும் என தெரிகிறது.
மாநிலம் முழுவதும் உள்ள 337 கடைகளிலும் சரக்குகள் முழுமையாக சப்ளை செய்யப்பட்டுள்ளன. அதேபோல கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான விற்பனை ரூ.3 ஆயிரம் கோடியாக இருந்தது. அதே காலகட்டத்தில் இந்தாண்டு ரூ.3 ஆயிரத்து 533 கோடியாக உயர்ந்தது.
2009-10ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த விற்பனை ரூ.5 ஆயிரத்து 300 கோடியை தாண்ட உள்ளது. ஆனால் கடந்தாண்டு இதே காலகட்டத்தில் விற்பனை அளவு ரூ.4 ஆயிரத்து 631 கோடியாக இருந்தது.
பீர் பாட்டில்களை பொருத்தவரை ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் கடந்தாண்டு 43 லட்சத்து 18 ஆயிரம் பாட்டில்கள் விற்றன. இந்தாண்டு 48 லட்சத்து 41 ஆயிரம் பீர் பாட்டில்கள் விற்றுத்தீர்ந்துள்ளன.
அரசுக்கு மது விற்பனை மூலம் வருவாய் அளவு, (ஏப்ரல் முதல் நவம்பர் வரை மட்டும்) ரூ.2 ஆயிரத்து 661 கோடியாக உள்ளது' என்றார்.












Click it and Unblock the Notifications