பிரபாகரனின் மனைவி, மகன், மகள் சரணடைந்த பின் ராணுவத்தால் கொல்லப்பட்டனர்- விக்ரமபாகு
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி:
சண்டேலீடர் பத்திரிகையில் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள தகவல்களின்படி விடுதலைப் புலிகளின் தலைவர்களான, நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட தலைவர்கள் ராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.
ஐ.நா. தலையீட்டுடன் அதிபருடன் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. சிலர் குடும்பத்துடன் சரணடைந்தனர்.
இவ்வாறு சரணடைந்த பிரபாகரன், நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட தலைவர்கள் அவர்களின் குடும்பங்களுடன் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கடந்த காலங்களில் கதையொன்று பரவியிருந்தது.
ஆனால் தற்போது பொன்சேகாவின் கருத்தின் மூலம், அதில் உண்மை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், மகள் துவாரகா, மனைவி மதிவதனி பிரபாகரன், அரசியல் பிரிவு தலைவர் பா. நடேசனின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் இவ்வாறு கொலைப்பட்டனர்.
இலங்கைக்கு உதவிகளை வழங்கிவரும் பணக்கார நாடுகள் இலங்கையில் இவ்வாறான குற்றச் செயல் இடம் பெற்றிருக்குமானால், அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என குரல் எழுப்பி வருகின்றன.
இலங்கையின் வரலாற்றில் மகிந்த ராஜபக்சே, கோதாபய ராஜபக்சே போன்றவர்கள் யுத்தத்தின் வீரர்களாக தம்மை இனங்காட்டிக் கொண்டதுடன், சிலர் தம்மை துட்டகைமுனுவாக (சிங்கள மன்னன்) காட்டிக் கொள்ள முயற்சித்தனர்.
வரலாற்றில் நடந்த போரின்போது, இரு தரப்பிலும் மக்கள் உயிரிழப்பதால், தனியே மோதலில் ஈடுபடுவோம் என தமிழ் மன்னன் எல்லாளன், துட்டகைமுனுவிற்கு யோசனை தெரிவித்தார்.
அப்போது எல்லாளனுக்கு 70 வயது எனக் கூறப்படுகிறது. யுத்தத்தில் எல்லாளன் கொல்லப்பட்டதும் துட்டகைமுனு எல்லாளனுக்கு அவமரியாதை செய்யவில்லை.
எல்லாளனை தனது தந்தையைப் போல் தூக்கிச் சென்று அடக்கம் செய்ததுடன் அவரது கல்லறைக்கு மரியாதை செலுத்துமாறும் மக்களுக்கு கற்பித்ததார்.
இவ்வாறு கூறியுள்ளார் கருணாரத்ன.
கருணாரத்னே முன்பு ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியில் இருந்தவர். பின்னர் அதிலிருந்து வெளியேறினார்.
தமிழர்களின் சுயாட்சி குறித்தும், தனி ஈழம் குறித்தும் ஆதரவான கருத்தைக் கொண்டவர் விக்ரமபாகு. இதனால் சிங்களர்களின் அதிருப்தியையும் சம்பாதித்துக் கொண்டவர். இருப்பினும் தனது நிலையில் தொடர்ந்து உறுதியாக இருந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.